தில்லுக்கு துட்டு 2 - விமர்சனம்
2/11/2019 11:50:07 AM
நடிப்பு: சந்தானம், ஷிரிதா சிவதாஸ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, பிபின், பைஜு, சிவசங்கர், டி.எம்.கார்த்திக்.
ஒளிப்பதிவு: தீபக்குமார் பாடி.
இசை: ஷபிர்.
தயாரிப்பு: ஹேண்ட்மேட் பிலிம்ஸ்.
இயக்கம்: ராம்பாலா.
ஆட்டோ டிரைவர் சந்தானம், சரியான அலப்பறை பார்ட்டி. நான் கடவுள் ராஜேந்திரனுடன் குடித்துவிட்டு அவர் செய்யும் அலப்பறைகளால், அ
ஆட்டோ டிரைவர் சந்தானம், சரியான அலப்பறை பார்ட்டி. நான் கடவுள் ராஜேந்திரனுடன் குடித்துவிட்டு அவர் செய்யும் அலப்பறைகளால், அல்லுசில்லாகி கிடக்கிறது ஏரியா. அங்கு குடியிருப்பவர்கள், இரண்டுபேரையும் துரத்தியடிக்க நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதே ஏரியாவில் குடியிருக்கும் டாக்டர் டி.எம்.கார்த்திக், மருத்துவமனையில் பணியாற்றுகின்றஷிரிதா சிவதாசை ஒருதலையாய்க் காதலிக்கிறார். திடீரென்று ஒருநாள் அவரிடம் ஐ லவ் யூ சொல்லும்போது, சட்டென்று வந்த ஒரு பேய் அவரை பெண்டு நிமிர்த்துகிறது. பிறகுதான் கார்த்திக்கிற்கு தெரிய வருகிறது, ஷிரிதாவிடம் யார் தனது காதலை சொன்னாலும் பேய் வந்து தாக்கும் என்று.
எனவே, ஷிரிதாவை வைத்து சந்தானத்தை அந்த ஏரியாவை விட்டு துரத்தியடிக்க திட்டமிடுகிறார். சண்டையில் படுகாயம் அடைந்த சந்தானத்துக்கு பிசியோதெரபி முறை சிகிச்சை அளிப்பதற்காக, ஷிரிதாவை அனுப்பி வைக்கிறார் டி.எம்.கார்த்திக். ஷிரிதா சிகிச்சை அளிக்க, உடனே சந்தானத்துடன் காதல் மலர்கிறது. பிறகு சந்தானம் தன்னுடைய காதலை ஷிரிதாவிடம் சொல்ல, அவரை பேய் கடுமையாக தாக்குகிறது. ஷிரிதாவின் தந்தை பிபின், கேரளாவில் மிகப் பெரிய மாந்திரீகர் என்றும், அவர் தனது மகளை பாதுகாப்பதற்காகவே பேய்களை பாடிகார்டாக வைத்துள்ள தகவலும் தெரிகிறது.
இதையடுத்து சந்தானம் மாந்திரீகரிடம் நேரில் பேசி, ஷிரிதாவை திருமணம் செய்வதற்காக ராஜேந்திரன் துணையுடன் கேரளா செல்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு சந்தானம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். பழைய நக்கலும், நையாண்டியும், டைமிங் காமெடியும் அப்படியே இருக்கிறது. முகத்தில் சிறிது தளர்ச்சி தெரிந்தாலும், காமெடியில் அதகளம் செய்திருக்கிறார். ராஜேந்திரனை வார்த்தைக்கு வார்த்தை போட்டுத் தாக்கி, தியேட்டரை அதிர வைத்து விடுகிறார். அவரும் சந்தானத்துக்கு ஈடுகொடுத்து காமெடி செய்துள்ளார். மாந்திரீகர் பிபின் தியானம் செய்யும்போது, அவருடைய பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் நிற்க, அங்கே வரும் சந்தானமும், ராஜேந்திரனும் குடித்துவிட்டு செய்கின்ற சில சேட்டைகள் காமெடியின் உச்சம்.
முட்டைக்கண் மற்றும் குண்டு உருவமாக முதலில் மிரட்டும் பிபின், பிறகு காமெடி டீமில் சேர்ந்து கலக்குகிறார். மலையாள காமெடியன் பைஜு, தன் பங்கிற்கு சிரிப்பு சரவெடிகளை சரமாரியாக கொளுத்திப் போடுகிறார். அறிமுக நாயகி ஷிரிதா, அம்சம். தன்னை காதலிப்பவர்களை பயந்து போய் பார்ப்பது, சந்தானத்துடனான காதலை மறுக்க முடியாமலும், ஏற்க முடியாமலும் தவிப்பது என ஸ்கோர் செய்கிறார். பெண் சாமியாராக வந்து, காமெடி ஆட்டம் போடுகிறார் ஊர்வசி. படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்கள் பங்கிற்கு காமெடி செய்ய, காமெடி பண்ணாத சீரியசான ஒரே கேரக்டர் ஷிரிதா மட்டும்தான்.
பெண்ணிடம் காதல் சொன்னால் பேய் அடிக்கும் என்ற புதிய காமெடி கான்செப்ட் பிடித்து, அதில் முழுக்க முழுக்க காமெடி தூவி, இரண்டரை மணி நேரம் நான்-ஸ்டாப்பாக சிரிக்க வைப்பதில் வெற்றிபெற்றுள்ளார், இயக்குனர் ராம்பாலா. முதல் பாகத்துக்கும், இதற்கும் கதையில் தொடர்பு இல்லை. பேய் பங்களா, பிறகு அதில் மாட்டிக்கொள்ளும் காமெடியன்கள், அங்கு நடக்கும் கலாட்டக்கள் என நிறைய ஒற்றுமைகள் உண்டு. போலி மந்திரவாதிகள், போலி ேபய் என்று தொடங்கும் படம், இறுதியில் சீரியஸ் பேய், அது உருவான விதம் என்று பேன்டசி ஏரியாவுக்குள்ளும் சென்று வருகிறது. சண்டை, பாடல் காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.
தீபக்குமார் பாடியின் ஒளிப்பதிவு பெரிய பலம். கடைசி 30 நிமிடங்கள் இரவு நேரத்தில் கதை நடக்கிறது. அந்த இருட்டை கதையோட்டத்துடன் கலந்து படமாக்கி இருக்கிறார். பாடல்களை விட பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளார், ஷபிர். பிபின், ராஜேந்திரன் இருவரும் கதவை மூடி திறக்கும் காட்சி உள்பட, படம் முழுக்க நினைத்து, நினைத்து சிரிக்க வேண்டிய காட்சிகள் நிறைய இருக்கிறது. என்றாலும், சில டபுள் மீனிங் டயலாக்குகளையும், காட்சி களையும் தவிர்த்து இருக்கலாம். லாஜிக்கை ஒதுக்கிவிட்டு பார்த்தால், தில்லுக்கு துட்டு, கொடுத்த துட்டுக்கு ஒர்த்து எனலாம்.