ஜேம்ஸ் பாண்டுக்கு வயசாயிடிச்சி!
10/5/2018 12:27:23 PM
ரோஜர் மூர், காலம் தாழ்ந்துதான் ஜேம்ஸ் பாண்ட் ஆனார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ‘லிவ் அண்ட் லெட் டை’ படத்தில் அவர் அறிமுகமாகும்போதே 46 வயது ஆகிவிட்டது. மூன்று படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடிப்பதுதான் அவரது திட்டம். ஈயான் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் அப்படிதான் ஒப்பந்தம் செய்திருந்தது.
எனினும், அந்த ஒப்பந்தத்தையும் தாண்டி ‘மூன்ரேக்கர்’ படத்திலும் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க ரோஜர் மூர் ஒப்புக் கொண்டார். வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் படத்தின் களத்தை தாண்டி விண்வெளியில் கதை நடப்பது மாதிரி விஷப்பரீட்சையில் இறங்கியதால், ஏற்கனவே ஜேம்ஸ் பாண்டாக பிரபலமாகி விட்ட ரோஜர் மூரையே வைத்து எடுப்பதுதான் வசூலுக்கு உதவும் என்று தயாரிப்பாளர்கள் கருதினார்கள். அடுத்து ‘ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி’ படத்தை திட்டமிட்டபோது, ரோஜர் மூருக்கு மாற்றாக வேறு ஒரு ஹீரோவை தேடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சம்பளம் மாதிரி மற்ற விஷயங்களை விடுங்கள். ரோஜர் மூருக்கு வயது வேறு ஏறிக்கொண்டே போய்க் கொண்டிருந்தது. 53 வயதில் அவரை ஜேம்ஸ் பாண்டாக சாகஸங்கள் செய்ய வைக்க முடியுமா என்கிற சந்தேகம் வேறு இருந்தது. புது ஜேம்ஸ் பாண்டை அறிமுகப்படுத்தலாம் என்று முடிவெடுத்தார்கள். ரோஜர் மூருமே கூட ஆளைவிட்டால் போதும் சாமி என்கிற நிலைக்கு வந்திருந்தார். ஏனெனில், ‘மூன்ரேக்கர்’ படத்துக்காக அவரது வயதுக்கு மீறிய கடுமையான உழைப்பை செலுத்தியிருந்தார். அதற்குரிய கொழுத்த ஊதியத்தை எதிர்ப்பார்த்தார். நம் தயாரிப்பாளர்கள் கொஞ்சம் கஞ்சம்தான். எனவேதான் ஏற்கனவே சீன் கானரியே கழட்டிக் கொண்டு போயிருந்தார் என்பதை ஏற்கனவே வாசித்திருக்கிறோம்.
லூயிஸ் காலின்ஸ், மைக்கேல் பில்லிங்டன், மைக்கேல் ஜேஸ்டன், இயான் ஓகில்வி என்று ஜேம்ஸ் பாண்ட் தோற்றத்துக்கு பொருந்தக்கூடியவர்களாக கருதப்பட்ட அப்போதைய பிரபல நடிகர்கள் பலரையும் ஆடிஷனுக்கு அழைத்தார்கள். யாருமே திருப்திகரமாகப் பொருந்தவில்லை. தயாரிப்புத் தரப்புக்கு டிமோதி டால்டனை ஜேம்ஸ் பாண்டாக ஆக்குவதற்கு ஆசை. ஆனால், டிமோத்தி ஒப்புக்கொள்ள மறுத்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஜேம்ஸ் பாண்ட் கேரக்டருக்கு அவர் பரிசீலிக்கப்பட்டபோது, “சீன் கானரியை என்னால் மிஞ்ச முடியாது” என்று தன்னடக்கத்தோடு மறுத்திருந்தார். இம்முறை, “ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரின் போக்கிலிருந்து மிகவும் விலகிவிட்ட நிலையில் நான் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க விரும்பவில்லை” என்று காரணம் சொன்னார்.
தயாரிப்புத் தரப்புக்கும், இயக்குநருக்கும் பயங்கர ஷாக். இயான் ஃப்ளெமிங் உருவாக்கிய ஜேம்ஸ் பாண்டிலிருந்து தாங்கள் மிகவும் விலகி விட்டதை அப்போதுதான் உணர்ந்தார்கள். பழைய டிராக்குக்கு மீண்டும் செல்லவேண்டிய அவசியத்தை டிமோத்தி டால்டன் சொன்ன காரணம் உருவாக்கியது. அதாவது வல்லரசு நாடுகளின் பனிப்போர். அதை சுற்றிய சம்பவங்கள். இந்த சம்பவங்களுக்குள் ஜேம்ஸ் பாண்டின் சாகஸங்கள் என்கிற பழைய டெம்ப்ளேட்டை மீண்டும் தூசு தட்டினார்கள். கையில், காலில் விழுந்து ரோஜர் மூரையே மீண்டும் நடிக்க வைக்க சம்மதிக்கச் செய்தார்கள். ஜேம்ஸ் பாண்ட் மீண்டும் அவரது டிராக்குக்கு வந்தபிறகு சில ஆண்டுகள் கழித்து அதே டிமோத்தி டால்டன், ஜேம்ஸாக நடிக்க மகிழ்வோடு சம்மதித்தார். எழுபதுகளின் ஜேம்ஸ் பாண்ட் படங்களை பற்றிய தன்னுடைய விமர்சனத்தை தான் ஜேம்ஸ் பாண்டாக ஆனபோது மிகவும் அழகாக முன்வைத்தார் டால்டன். அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம்.
“ரோஜர் மூர், ஜேம்ஸ் பாண்டாக மிகவும் சிறப்பாகவே நடித்துக் கொண்டிருந்தார். ஆனால், ஜேம்ஸ் பாண்ட் படத்துக்குரிய குறிப்பான கதைக்களத்தை விட்டுவிட்டு, தொழில்நுட்பத்தில் ரசிகர்களை மெய்மறக்க செய்ய வேண்டும் என்று இயக்குநர்கள் மெனக்கெட்டுக் கொண்டிருந்தார்கள். கதையெல்லாம் டப்பா. ஒரு வில்லன் இருப்பான். அவன் ஒரு ராஜ்ஜியத்தை ஆளுவான். உலகத்தை அழிக்க திட்டமிடுவான். ஜேம்ஸ் முறியடிப்பார் என்றே எல்லாப் படங்களும் வரிசையாக வந்துக் கொண்டிருந்தன. ஜேம்ஸ் பாண்ட் படங்கள் ஃபேண்டஸி வகையை சார்ந்தவைதான். ஃபேண்டஸியை ரசிக்க வைக்க வேண்டுமானால், அந்த உலகத்தில் இருக்கும் கதைமாந்தர்கள் நம்பகத்தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். அந்தக் காலத்து ஜேம்ஸ் பாண்டோ, அவரது வில்லன்களோ கூட சூப்பர்மேன்கள் மாதிரி காதுலே பூ சுத்துகிற ரகமாகவே இருந்தார்கள். என்னுடைய இந்த விமர்சனத்தை தயாரிப்பாளர் ஆல்பர்ட் பிராக்கோலி ஏற்றுக் கொண்டார். அவர் ஏற்றுக் கொண்டதோடு மட்டுமில்லாமல், உடனடியாக இந்தக் குறையை போக்குவதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கினார்” என்று டிமோத்தி டால்டன் சொன்னார்.
அவர் சொன்ன சம்பவம் ‘ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி’ படத்தை தயாரிக்க திட்டமிடும்போது நடந்ததுதான். ஜேம்ஸ் பாண்டிலேயே ஊறித்திளைத்த ஒருவரைதான் இயக்குநர் ஆக்க வேண்டுமென்று தயாரிப்பாளர் விரும்பினார். முந்தைய ஜேம்ஸ் படங்களுக்கு எடிட்டராகவும், செகண்ட் யூனிட் டைரக்டராகவும் அனுபவம் பெற்றிருந்த ஜான் க்ளெனுக்கு இப்படிதான் இயக்குநராகும் அதிர்ஷ்டம் அடித்தது. இதற்குப் பிறகும் மேலும் நான்கு ஜேம்ஸ் பாண்ட் படங்களை இயக்கி பெரும் புகழ் பெற்றார். எண்பதுகளின் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் அத்தனையும் இவரது கைவண்ணம்தான்.
“ஜேம்ஸ் பாண்ட் எதற்காகப் புகழ் பெற்றாரோ, அதை நோக்கி மீண்டும் ஜேம்ஸை திருப்பினோம்” என்கிறார் ஜான் க்ளென்.
முந்தையப் படமான ‘மூன்ரேக்கர்’ விட பட்ஜெட் குறைவு. எனினும் தயாரிப்புத் தரப்பை ‘ஹேப்பி’ செய்யுமளவுக்கு கச்சிதமான திட்டமிடலில், படப்பிடிப்பை ரொம்பவும் சுமுகமாகவே நடத்தினார் க்ளென். ரோஜர் மூருக்கு உயரமான இடங்களுக்கு செல்வதென்றால் கொஞ்சம் அச்சம். ஒரு மலை மீது ஷூட்டிங் நடந்தபோது, அவருக்கு ‘சரக்கு’ ஊற்றிக் கொடுத்து போதையிலேயே வைத்து வேலை வாங்கினாராம் க்ளென்.
1981, ஜூன் மாதம் ‘ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி’ வெளியானது. இங்கிலாந்தில் இன்றுவரை முதல்நாளில் அதிக ரசிகர்கள் பார்த்த சாதனையை இப்படம் தக்கவைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ‘மூன்ரேக்கர்’ வசூலித்த மலையளவு வசூலை நெருங்கியது. ஆரம்பத்திலிருந்தே ஜேம்ஸ் பாண்ட் படங்களை வினியோகித்து வந்த, யுனைட்டெட் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் வெளியிட்ட கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் இதுதான். இதற்குப் பிறகு அந்த ஸ்டுடியோ எம்.ஜி.எம். ஸ்டுடியோவோடு இணைந்துவிட்டது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் புகழ்பெற்ற ரோஜர் முர் - சீன் கானரி மோதல் அரங்கேறியது.