ஒன்பதுல குரு
3/14/2013 1:13:04 AM
வினய் மனதுக்கு பிடிக்காத பெண் மனைவியாக வருகிறாள். சத்யனுக்கு அடங்காப்பிடாரி மாமியாருக்கு பயந்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கப் பிடிக்கவில்லை. குடும்பத்தோடு ஒற்றுமையாக இருக்காமல் சுயநலத்தோடு செயல்படும் மனைவி, அரவிந்த் ஆகாஸுக்கு. இப்படி குடும்ப வாழ்க்கை கசந்து போனவர்கள் விரைவில் திருமணம் செய்ய இருக்கும் சாம்ஸுக்கு குடும்ப வாழ்வின் கஷ்டத்தைச் சொல்லி அவரது திருமணத்தை நிறுத்துகிறார்கள்.
நான்குபேரும் பேச்சுலர் லைஃபை மீண்டும் என்ஜாய் பண்ணுவது என்று முடிவு செய்து பெங்களூருக்கு கிளம்புகிறார்கள். அங்கு ஜாலியாக அவர்களது வாழ்க்கைக்குள் நுழைகிறார் லட்சுமிராய். தன் அழகால் அவர்களை அலைய வைத்து அதை படம் எடுத்து பிளாக் மெயில் செய்கிறார். இந்த சிக்கலில் இருந்து இவர்கள் எப்படி மீள்கிறார்கள். பேமிலி வாழ்க்கைக்கு எப்படி திரும்புகிறார்கள் என்பதை காமெடியாகச் சொல்கிறது படம்.
கதை, லாஜிக் இப்படி எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தியேட்டருக்கு வருகிறவர்களை சிரிக்க வைத்து அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு படம் தந்திருக்கிறார் இயக்குனர். ‘பேச்சுலராக விரும்பும் பேமிலி மேன்கள்’ என்ற ஒன் லைனை வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற காட்சிகளையும், வசனங்களையும், பின்னணி இசையையும் கலந்துகட்டி அடித்து சிரிக்க வைக்கிறார்.
கரடியிடம் அடிவாங்கி விழி பிதுங்குவது, குண்டு பெண்ணின் ரொமான்ஸில் திக்குமுக்காடுவது, அடியாட்களுக்கு பணம் கொடுத்து ஹீரோ பில்டப் கொடுப்பது என காமெடி ஹீரோவாகவே மாறியிருக்கிறார் வினய். அடுத்த ஹீரோ சத்யன்தான். காணாமல் போகும் மாமியாரின் நாயை தேடி அலைவதும், அவர் வீட்டுக்கு திருடச் சென்று மாமியாரிடம் கராத்தே அடிவாங்குவதும், கரடியின் முத்தத்தால் முகம் வீங்கிக் கிடப்பதுமாக ரணகளப்படுத்துகிறார். அரவிந்த் ஆகாஸும், சாம்சும் இந்த காமெடி டீமுக்கு கம்பெனி கொடுத்திருக்கிறார்கள்.
லட்சுமிராய், எல்லோரையும் ஜொள்ளுவிட வைக்கிறார். பின்பு அடியாட்களை வைத்து பின்னி எடுக்கிறார். திடீரென லேடி வில்லன் அவதாரம் எடுத்து மிரட்டுகிறார். ஆனாலும் இன்னும் கொஞ்சம் லட்சுமிராயை பயன்படுத்தியிருக்கலாம். திடீர் பணக்காரனாகி பிரேம்ஜி செய்யும் அலப்பறையும், வினய்யின் குண்டு மனைவியாக வரும் கீதா சிங்கின் ஆர்ப்பாட்டமும் ரசிக்க வைக்கிறது. கே இசையில் பாடல்கள் பரவாயில்லை. செல்லத்துரையின் ஒளிப்பதிவு காட்சியின் தேவைக்கேற்ப அமைந்திருக்கிறது.
பில்லா, ரங்கா, கோச்சடையான், குரு, பல்ராம் நாயுடு என சினிமா கேரக்டர்களின் பெயர்களை கதாபாத்திரங்களுக்கு வைத்து சினிமாவைக் கொண்டே சினிமாவில் சிரிக்க வைக்கிறார்கள். என்றாலும் இயக்குனரின் கவனம் முழுவதும் சிரிக்க வைப்பதிலேயே இருப்பதால் கவனிக்க ஆளின்றி தடுமாறுகிறது திரைக்கதை.
, தினகரன் விமர்சனக்குழு.