வத்திக்குச்சி
3/23/2013 12:29:52 AM
ஷேர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துகிறார் ஹீரோ திலீபன். அதே பகுதியில் வசிக்கும் அஞ்சலி மீது, அவருக்கு காதல். ‘நான் உன்னை காதலிக்க மாட்டேன். நீ வேணா என்னை காதலிச்சுக்கோ’ என்கிறார் அஞ்சலி. அதே வேளையில், திலீபனை போட்டுத்தள்ள கூலிப்படையை சேர்ந்த சம்பத், நகைக்கடை ஓனர் ஜெயப்பிரகாஷ், எல்.ஐ.சி ஏஜென்ட் ஜெகன் ஆகியோர் ஸ்கெட்ச் போட்டு வளைக்கின்றனர். அவர்கள் திலீபனை ஏன் கொல்லத் துடிக்கிறார்கள்? அதிலிருந்து தப்பித்தாரா, அஞ்சலியுடனான காதல் நிறைவேறியதா என்பது கதை.
ஷேர் ஆட்டோ டிரைவராக, திலீபன். ஓவர் பில்டப் இல்லாமல் அறிமுகமாகிறார். அஞ்சலியைப் பார்த்ததும் அவர் செல்லும் இடத்தின் பெயரை உரக்கச் சொல்லி, அவரை எப்படியாவது தன் ஆட்டோவில் பயணிக்க வைத்துவிடும் சாமர்த்தியசாலி. சம்பத், ஜெயப்பிரகாஷ், ஜெகன் ஆகியோரின் டார்கெட்டில் இருந்து எஸ்கேப் ஆவது, மாட்டிக்கொள்வது, மீண்டும் எஸ்கேப் ஆவது என ஆக்ஷனில் கண்ணாமூச்சி ஆடுகிறார். சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டும் திலீபன், காதல் காட்சி எக்ஸ்பிரஷனில் இன்னும் டெவலப் ஆக வேண்டும்.
அஞ்சலிக்கு இது ‘டெய்லர் மேட்’ ரோல். அனாயசமாக ஊதித் தள்ளுகிறார். முதலில் திலீபனை வெறுப்பது போல் பேசிவிட்டு, இறுதியில் அவரைத்தான் திருமணம் செய்வேன் என்று அம்மாவிடம் கெஞ்சும்போது, மனதில் நிற்கிறார். சம்பத், வழக்கமான தாதா. எதிரிகளை பார்த்ததும் வெட்டிச் சாய்க்கும் சூராதி சூரரான அவர், திலீபனை மட்டும் கிளைமாக்ஸ் வரையிலும் விரட்டிக்கொண்டே இருப்பது, காமெடி. அவருக்கு பக்கபலமாக நின்று, வில்லத்தனத்தில் அடக்கி வாசித்திருக்கிறார் ரவிமரியா. ஜெயப்பிரகாஷ், பட்டிமன்றம் ராஜா, சரண்யா பொன்வண்ணன், ஸ்ரீரஞ்சனி போன்றோரும் நடித்துள்ளனர். காமெடி ஜெகனுக்கு வில்லன் முகம் பொருந்தவில்லை.
ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவில், சமத்துவபுரத்தின் சாதாரண குடும்பங்கள் இயல்பாகப் பதிவாகி இருக்கிறது. ஜிப்ரான் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை ஓ.கே.
நடுரோட்டில் ஒரு கொலை நடக்க இருப்பதைக் காட்டி, அதை ஹீரோ முறியடிக்கும் விதம் சபாஷ் போட வைக்கிறது. ஆனால், ஏராளமான வீடுகளும், மக்கள் நடமாட்டமும் உள்ள ஒரு ஏரியாவில், ஜெகன் குரூப்பிடம் சிக்கிக்கொண்ட ஹீரோ, உதவிக்கு ஆளில்லாமல் உயிருக்குப் போராடுவதை நம்ப முடியவில்லை. அறிமுகமே இல்லாதவர்களுக்கு உதவி செய்யப்போன ஹீரோவுக்கு என்னென்ன விபரீதங்கள் ஏற்படுகிறது என்பதை சொல்ல வந்த இயக்குனர், அதை ஒவ்வொருமுறையும் நீண்ட நீண்ட காட்சிகளாக விவரிப்பது நெருடல்.
, தினகரன் விமர்சனக்குழு