நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தம்பதி மகாதாரா பகவத், ரேணுகா சதீஷின் மகன் கந்தர்வா. அவ்வப்போது கருப்பு உடையணிந்த ஒரு உருவம், ‘நான்தான் கீனோ, என்னுடன் வந்துவிடு’ என்று கந்தர்வாவை பயமுறுத்துகிறது. இதனால், வீட்டிலுள்ள கெட்ட சக்தியை விரட்ட விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஆனால், தீயசக்திகள் இல்லை என்று கண்டுபிடிக்கின்றனர். யார் அந்த கீனோ, அதன் நோக்கம் என்ன, கந்தர்வா கதி என்ன ஆகிறது என்பது மீதி கதை.
மகாதாரா பகவத், ரேணுகா சதீஷ், கந்தர்வா ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். கந்தர்வாவை டார்கெட் செய்யும் கீனோவின் உருவமும், குரலும் மிரட்டுகிறது. எழுதி, இசை அமைத்து இயக்கியுள்ள ஆர்.கே.திவாகர், கீனோ கேரக்டரில் கலக்கியிருக்கிறார்.
ராஜேஷ் கோபிசெட்டி, சுந்தர் அண்ணாமலை, சிவம், கண்ணதாசன் ஆகியோரும் யதார்த்தமாக நடித்துள்ளனர். தமிழ் படவுலகில் இதுவரை சொல்லப்படாத கதையை மையப்படுத்தி படத்தை உருவாக்கிய குழு, கிளைமாக்ஸில் சொல்லும் தகவல்கள், ‘அட… இத்தனை நாளா தெரியாம போச்சே’ என்று வியக்க வைக்கிறது. ஆலிவர் டேனியின் ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கிறது. பின்னணி இசை மிரட்டுகிறது. கிருத்திகா காந்தியின் எடிட்டிங் கச்சிதமாக இருக்கிறது. வித்தியாசமான கதையை திரையில் விறுவிறுப்பாக சொல்ல தவறிவிட்டனர்.