சென்னை: நாட்டுப்புறக்கலைஞர், திரைப்பட பின்னணி பாடகர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என்று பன்முகத்திறமை கொண்ட அந்தோணி தாசன், ‘ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்’ என்ற நிறுவனத்தின் மூலம் தனி ஆல்பங்களை வெளியிடுகிறார். இந்நிலையில் அவர், வரும் சுதந்திர தினம் அன்று வெளியிடுவதற்காக, ஐவகை நிலங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலை உருவாக்குகிறார். இதன் இசையை அவரே அமைக்கிறார். நடிகர்கள், படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கான தேர்வு நடந்து வருகிறது.
இதுகுறித்து அந்தோணி தாசன் கூறும் போது, ‘தங்களிடம் பல்வேறு திறமைகள் இருந்தும் கூட அவற்றை வெளிப்படுத்த சரியான தளங்களும், வாய்ப்புகளும் கிடைக்காத பல கலைஞர்களைக் கண்டறிந்து, அவர்களைக் கலையுலகில் அடையாளப்படுத்தவும், அவர்களின் திறமைகள் அங்கீகரிக்கப்படவும் உதவும் வகையில் ‘ஃபோக் மார்லி’ நிறுவனத்தை நான் தொடங்கியுள்ளேன். ‘வந்தே மாதரம்’ ஆல்பத்துக்கான படப்பிடிப்பு ஐவகை நிலங்களில் படமாக்கப்படுகிறது. சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வேடங்களில் நான் நடிக்க திட்டமிட்டுள்ளேன். மேலும், நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவும், அவர்களின் பாடல்களுக்கு காப்புரிமை கிடைக்கவும் தொடர்ந்து போராடி வருகிறேன்’ என்றார்.