துபாய்: அபுதாபியில் கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடந்தது. இதில், இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அவருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார். அப்போது சல்மான்கான் உள்பட அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி கமல்ஹாசனை கவுரவப்படுத்தினார்கள். விழா நிகழ்ச்சிகளை அபிஷேக் பச்சன் தொகுத்து வழங்கினார்.
விருது பெற்ற பிறகு கமல்ஹாசன் பேசுகையில், ‘எனது மூன்றரை வயதில் சினிமாவில் நடிக்க வந்தேன். நான் வளர்ந்தது மொத்தமும் சினிமாவில் மட்டும்தான். இத்தனை ஆண்டுகளாகியும், இந்த வயது வரை என்னையும் நடிக்க அனுமதித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களின் உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றி’ என்றார். இதை அவர் ஆங்கிலத்தில் பேசினார். முடிவில், ‘அனைவருக்கும் நன்றி’ என்று தமிழில் பேசியபோது, பார்வையாளர்களின் கூடுதல் கரவொலி அரங்கை அதிர வைத்தது.