சென்னை: தமிழில் சரண் இயக்கிய ‘அசல்’ என்ற படத்தில் அஜித் குமார் ஜோடியாக நடித்த பாவனா, கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டு பெங்களூருவில் குடியேறினார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அவ்வப்போது நடித்து வந்த அவர், பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். ஆனால், இப்படம் நேரடியாக மலையாளத்தில் உருவாக்கப்படுகிறது. பிறகு தமிழில் டப்பிங் செய்யப்படுகிறது. இப்படத்தில் ரஹ்மான், பாவனா முதல்முறைஇணைந்து நடிக்கின்றனர். படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. தற்போது கொச்சியில் படப்பிடிப்பு நடக்கிறது. ரியாஸ் மாரத் இயக்கும் ஆக்ஷன் திரில்லர் கதை கொண்ட இதில், மிரட்டலான போலீஸ் அதிகாரி கேரக்டரில் ரஹ்மான், தடயவியல் மருத்துவ அதிகாரி வேடத்தில் பாவனா நடிக்கின்றனர். ஏ.பி.கே சினிமாஸ் சார்பில் ஆதித் பிரசன்னகுமார் தயாரிக்கிறார். இதன் அடுத்தக்கட்ட ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் பொள்ளாச்சி, பாண்டிச்சேரி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் நடக்கிறது. ‘துருவங்கள் 16’ சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார்.
தற்போது மலையாளத்தில் ரஹ்மான் நடித்து வரும் ‘ஏதிரே’, ‘சமாரா’ ஆகிய படங்களுக்கான படப்பிடிப்பும் நடந்து வருகிறது. தமிழில் சுப்பு ராம் இயக்கத்தில் ‘அஞ்சாமை’, கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார், அதர்வாவுடன் நடிக்கும் ‘நிறங்கள் மூன்று’ ஆகிய படங்களும் உருவாகி வருகின்றன. இந்தியில் ரஹ்மான் அறிமுகமாகும் ‘கண்பத்’ என்ற படத்தை ‘குயின்’ விகாஸ் பால் இயக்குகிறார். இதில் அமிதாப் பச்சன் மகன்களாக ரஹ்மான், டைகர் ஷெராப் நடிக்கின்றனர். வரும் தீபாவளியன்று இப்படம் திரைக்கு வருகிறது. ரஹ்மான் ஹீரோவாக நடிக்கும் முதல் வெப்தொடரை, டிஸ்னி ஹாட்ஸ்டாருக்காக ஆகஸ்ட் சினிமாஸ் தயாரிக்கிறது. இதை நஜீம் கோயா இயக்குகிறார். ‘1000 பேபீஸ்’ என்ற பெயருடன் கொச்சியில் படப் பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.