Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஏஐ தொழில்நுட்பம் நம்மை கெடுத்துவிட்டது: கங்கை அமரன் வேதனை

சென்னை: டிரம்ஸ் ஜெர்ரி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கிளாடி ஜெராடு தயாரிக்க, ‘உறவுகள்’ என்ற தலைப்பில் ‘உயிரிணையே’ என்ற இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கங்கை அமரன், இசை அமைப்பாளர்கள் சதா சுதர்சனம், கண்ணன், பாடகி தவசீலி தன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் கலந்துகொண்டனர். அப்போது கங்கை அமரன் பேசியதாவது: கிளாடி ஜெராடுவின் நல்ல எண்ணம்தான் இப்பாடல் தொகுப்பு. அருமையான சமூக உறவுகளை, ஏஐ மூலம் நடிக்க வைத்து உருவாக்கியுள்ளார். முன்பு ஒரு பாடலை நேரலையில் பாடுவோம்.

இப்போது ஒவ்வொரு வரியாக பாடுகிறோம். ஏஐயில் பீட் செய்து பாடுகிறோம். அதற்கு நாம் எப்படி பெருமைப்படுவது? ஏஐ தொழில்நுட்பம் நம்மை கெடுத்து வருகிறது. அதை மட்டுமே நம்பி பணியாற்றினால், பிற்காலத்தில் நமது மூளை வேலை செய்யாது. ஒரு தீம்-ஐ ஏஐயில் கொடுத்துவிட்டால், அதுவே பாட்டு எழுதிவிடுகிறது. இதில் எப்படி நமது பெயரை போடுவது? வருங்கால குழந்தைகள் தானாக சிந்திக்க வேண்டும், எழுத தெரிந்துகொள்ள வேண்டும், தன்னிடம் மறைந்திருக்கும் சுயரூபங்களை வெளியில் கொண்டு வரவேண்டும்.