மற்றவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்: அஜித் வேண்டுகோள்
சென்னை: தமிழ் படவுலகின் முன்னணி நடிகர் களில் ஒருவரான அஜித் குமார், நடிப்பை தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் பங்கேற்று வருகிறார். ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தை தொடர்ந்து எந்த படத்திலும் நடிக்காத அவர், தற்போது கார் ரேஸில் அதிக கவனம் செலுத்துகிறார். துபாய், பெல் ஜியம், ஸ்பெயின் ஆகிய நாடுகளை தொடர்ந்து மலேசியாவில் நடந்து வரும் கார் ரேஸில் பங்கேற்று வந்த அஜித் குமாரை சிம்பு, இயக்குனர் சிவா ஆகியோர் சந்தித்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 மணி நேர கார் ரேஸில் பங்கேற்ற அஜித் குமார், தன்னை நேரில் பார்க்க வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் தனித்தனியே செல்ஃபி எடுத்துக்கொண்டார். உடனே அந்த வீடியோ வைரலானது. ஆனால், கார் பந்தயம் நடக்கும் இடத்துக்கு வந்து தன்னுடன் செல்ஃபி எடுக்க முயற்சிக்கும் ரசிகர்களுக்கு அவர் திடீரென்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தயவுசெய்து மற்ற அணிகளை தொந்தரவு செய்யாதீர்கள். இது எனது நற்பெயர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, நம் அனைவருக்குமானதும் கூட. எனவே, அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்’ என்றார்.
