Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஒழுங்காக வரி செலுத்துவோருக்கு சலுகைகள் தர வேண்டும்: விஜய் சேதுபதி நச்

சென்னை: மதுரையில் வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் மைய தொடக்க விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நான் படிப்பை முடித்துவிட்டு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆடிட்டரிடம் அசிஸ்டண்டாக ஆறுமாதம் வேலை பார்த்தேன். அப்போது அரசு தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்வது சிரமமாக இருக்கும். ஆனால் தற்போது எளிதாக, புரிகிற அளவுக்கு இணையதளம் ஆரம்பித்து, பான் கார்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் அதில் இருக்கும் சிக்கல்கள் என்ன என்பதை வருமான வரித்துறை கார்ட்டூன் வடிவில் கொண்டு வந்திருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

நான் பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டுமானால், அது ஆங்கிலத்திலும், இந்தியில் மட்டும்தான் இருக்கிறது. நிறைய பேருக்கு அது புரிய கடினமாக இருக்கும். அது தமிழில் இருந்தால் எளிமையாக புரியும். பொதுவாக ஒரு பிரச்னை வந்தால் தான் அதைப் பற்றி தெரிந்து கொள்கிறோம். மற்றபடி இந்த முயற்சி அற்புதமானது. வரி செலுத்துவது முக்கியமும் அவசியமுமானது.

எந்தளவு நமது உரிமைக்காக அரசிடம் கோரிக்கை வைக்கிறோமோ, அந்தளவுக்கு வரி செலுத்துவதும் அவசியம். அது நமது கடமை என நம்புகிறேன். ரொம்ப நாளாக என் மனதில் ஒரு கோரிக்கை இருக்கிறது. நாம் கஷ்டப்பட்டு நன்றாக சம்பாதிக்கும் போது நல்ல வரி செலுத்தியிருப்போம். நல்ல முறையில் ஒழுங்காக வரி செலுத்தும் குடிமகன்களுக்கு ஏதாவது சலுகைகள் வழங்கினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.