Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

செல்லகுட்டி விமர்சனம்

டாக்டர் டிட்டோ, மகேஷ், தீப்ஷிகா ஆகியோர் ஒரே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கின்றனர். ஆதரவற்ற ஸ்ரீமகேஷ் மீது தீப்ஷிகா இரக்கம் காட்ட, அவரை ஸ்ரீமகேஷ் ஒருதலையாய்க் காதலிக்கிறார். ஆனால், டாக்டர் டிட்டோவை தீப்ஷிகா ஒருதலையாய்க் காதலிக்கிறார். இந்த முக்கோண காதலில் என்ன நடக்கிறது என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ். 1990 காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. டாக்டர் டிட்டோ, ஸ்ரீமகேஷ் ஆகியோர் பள்ளி மாணவர்களாகவும், அதற்குப் பிறகான வாழ்க்கையிலும் வித்தியாசம் காட்டி சிறப்பாக நடித்துள்ளனர்.

தீப்ஷிகா, சிம்ரன் ஆகியோர் அழகாகவும் இருக்கின்றனர், அருமையாகவும் நடித்திருக்கின்றனர். ஜாங்கிரி மதுமிதா, சாம்ஸ் கூட்டணியின் காமெடி கலகலக்க வைக்கிறது. மற்றும் திடியன், சாப்ளின் சுந்தர், மணி, லட்சுமி, புஷ்பலதா, ‘சிந்து நதி பூ’ செந்தமிழன் உள்பட அனைவரும் நன்கு நடித்துள்ளனர். பால் லிவிங்ஸ்டன், பாலா பழனியப்பன் ஆகியோரின் கேமரா, காட்சிகளுக்கு ஏற்ப பயணித்துள்ளது. பாடல்கள் அழகியலுடன் படமாக்கப்பட்டுள்ளது.

டி.எஸ்.முரளிதரன் இசையில் ‘புன்னகையில் பூ பறிக்கும்’ என்ற டூயட் மனம் கவர்கிறது. ‘கட்டு கட்டு கமர்கட்டு’ என்ற பாடலில் ‘மஸ்காரா’ அஸ்மிதா அசத்தலாக ஆடியுள்ளார். சிற்பியின் பின்னணி இசை கதையின் நகர்வுக்கு உதவியிருக்கிறது. ‘சிந்துநதி பூ’ இயக்குனர் செந்தமிழன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். 1990 காலக்கட்ட காதலையும், நல்ல மெசேஜையும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். கதை எழுதி இயக்கியுள்ள சகாயநாதன், உண்மையான காதல் பற்றி பிரசார நெடியின்றி சொல்லியிருக்கிறார். சில காட்சிகளை வலிந்து திணித்தது போல் தோன்றுகிறது.