Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இயக்குனரின் நடிகனாக மாறிவிட்டேன்: சிவகார்த்திகேயன்

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, சேத்தன், குரு சோமசுந்தரம், பிரகாஷ் பெலவாடி, ராணா டகுபதி, பசில் ஜோசப், தனஞ்செயா நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிபெற்றுள்ள படம், ‘பராசக்தி’. ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இது ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள 100வது படம் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: படத்தை பார்த்துவிட்டு ராதிகா மேடம் பேசும்போது, ஒவ்வொரு படத்திலும் எனது நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது என்று பாராட்டினார். கமல்ஹாசன் சார் ஐந்து நிமிடங்கள் படத்தை பற்றி பாராட்டினார். எப்போதுமே அவர் இப்படி பேச மாட்டார். அவரது தயாரிப்பில் நான் நடித்த ‘அமரன்’ படத்துக்கு கூட இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசினார்.

ரஜினிகாந்த் சார் போன் செய்து, ‘ரொம்ப போல்டான படம். நன்றாக நடித்திருக்கிறீர்கள். இரண்டாவது பாதி அருமையாக இருந்தது’ என்று பாராட்டினார். ‘டாக்டர்’ படத்துக்கு முன்பு வரை, நான் நடித்த காட்சிகளை உடனே டைரக்டரிடம் இருக்கும் மானிட்டரில் பார்ப்பேன். இப்போது மானிட்டர் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். காரணம், இப்போது நான் ‘இயக்குனரின் நடிகனாக’ மாறிவிட்டேன்.

அவர்கள் சொல்வதை மட்டுமே செய்கிறேன். கதை கேட்கும்போது கரெக்‌ஷன்கள் சொல்வதோடு சரி. டைரக்டர் கஷ்டப்பட்டு எனது கேரக்டரை உருவாக்கி, அதை ஷூட்டிங் மூலம் வெளியே கொண்டு வருகிறார். எனவே, அவருக்குத்தான் திரையில் என்னை எப்படி பிரதிபலிக்க வேண்டும் என்று தெரியும். அதனால், மானிட்டரை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறேன். அதற்கு பிறகு ‘டான்’ சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கிறேன்.