Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கெணத்த காணோம் விமர்சனம்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சத்தில் பரிதவிக்கும் கோடாங்கிபட்டி கிராமத்தில் வசிக்கும் மக்கள், கிணறு வெட்ட நீரோட்டம் இருக்கும் இடத்தை கண்டறிகின்றனர். அந்த இடத்தில் யோகி பாபுவின் வீடு இருப்பதால், கிராமத்து மக்கள் அவரிடம் அனுமதி கேட்டவுடன் சம்மதிக்கிறார். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, தண்ணீருக்கு பதிலாக டைனோசரின் எலும்புக்கூடு கிடைக்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

கோயில் பூசாரியாகவும், சிற்பியாகவும் யோகி பாபு சிறந்த குணச்சித்திர நடிப்பை வழங்கியுள்ளார். அவருக்கும், லவ்லின் சந்திரசேகருக்குமான காதலும், ஊடலும் சுவாரஸ்யம். தொல்லியல் துறை அதிகாரி ரெய்ச்சல் ரேபேக்கா, அவரது உதவியாளர் ராமகிருஷ்ணன், ஹலோ கந்தசாமி, கலெக்டர் ஜார்ஜ் மரியன் மற்றும் கிராமத்து மக்கள் இயல்பாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளனர்.

வறண்டு போன கிராமத்தின் அவலத்தை தியாகராஜன் கேமரா அசலாகப் பதிவு செய்துள்ளது. நிவாஸ் கே.பிரசன்னா பின்னணி இசை, தண்ணீருக்கு தவிக்கும் மக்களின் அவலங்களை பிரதி பலிக்கிறது. எடிட்டர் ராமரின் பணி கச்சிதம். கிராமத்தை வடிவமைத்த கலை இயக்குனர் சுபேனந்தர் பாராட்டுக்குரியவர். மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையா எழுதி இயக்கியுள்ளார். நீரின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கிராமத்து மக்களுடைய சோகத்தை காமெடி முலாம் பூசி யதார்த்தமாக சொல்லியிருக்கிறார்.