சென்னை: ராதா பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜி.ஆர்.மதன் குமார் தயாரித்துள்ள படம், ‘ஐபிஎல்’ என்கிற ‘இந்தியன் பீனல் லா’. கருணாநிதி எழுதி இயக்கியுள்ளார். ‘ஆடுகளம்’ கிஷோர், டிடிஎஃப் வாசன், அபிராமி, குஷிதா, சிங்கம்புலி, ஹரீஷ் பெராடி, ‘ஆடுகளம்’ நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன், ஜனனி நடித்துள்ளனர். எஸ்.பிச்சுமணி ஒளிப்பதிவு செய்ய, அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைத்துள்ளார்.
வரும் 28ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு கலந்துகொண்டனர். அப்போது கருணாநிதி பேசுகையில், ‘சாதாரண மனிதன் சந்தோஷமாக வாழும்போது அதிகார பலமும், பண பலமும் கொண்டவர்கள் தங்களுக்கு பிரச்னை ஏற்பட்டால், அதை சாதாரண மனிதன் மேல் திணித்துவிட்டு எப்படி தப்பிக்கிறார்கள்? சாதாரண மனிதர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை படம் சொல்கிறது. இதுபோன்ற விஷயத்தை படத்தில் பேசியிருக்கிறோம்’ என்றார்.
டிடிஎஃப் வாசன் பேசும்போது, ‘இது என் முதல் படம். நிறைய தவறுகள் செய்திருக்கிறேன். அதை சொன்னால் திருத்திக்கொள்கிறேன். நான் கூச்ச சுபாவம் கொண்டவன் என்று சொன்னால் நம்ப மறுக்கிறார்கள். பாடலுக்கு நடனமாடவே தெரியாமல் ஆடியிருக்கிறேன். எனக்கு ஜோடியாக குஷிதா முழுமையாக ஒத்துழைத்தார். குறிப்பாக, முத்தக்காட்சியில் சவுகரியமான பங்களிப்பை வழங்கினார்’ என்றார்.
