Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சுதந்திரத்தை பறிகொடுத்த நித்யா மேனன்

மலையாள நடிகை நித்யா மேனன் தெலுங்கில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவர் நடித்த ‘அலா மொதலைந்தி’ என்ற படம் கடந்த 2011ல் வெளியானது. பி.வி.நந்தினி ரெட்டி இயக்க, நானி ஹீரோவாக நடித்தார். இதுபற்றி நித்யா மேனன் கூறுகையில், ‘அதாவது, ‘அலா மொதலைந்தி’ என்றால், ‘அப்படித்தான் அது தொடங்கியது’ என்று பொருள். எனக்கு இதுபோன்ற தலைப்பு கொண்ட படத்தை கொடுத்தது, பிரபஞ்சத்தின் லீலை என்றுதான் சொல்ல வேண்டும். நந்தினி ரெட்டியும், நானும் தெலுங்கில் அதுவரை வராத காதல் கலந்த நகைச்சுவை படத்தை உருவாக்கினோம். படப்பிடிப்பு தளத்தில் நிறைய மாற்றங்களை செய்வோம். நாங்கள் அப்போது பிரபலம் இல்லை என்பதால், எங்களுக்கு எந்தவொரு அழுத்தமும் இல்லை.

அதனால் எங்களுக்கு பிடித்ததை செய்தோம். நாங்கள் நாங்களாகவே இருந்தோம். ஒருநாள் படப்பிடிப்புக்கு செல்லும் போது, மதிய உணவு வாங்க சப்வே உணவகத்தில் நின்றோம். நந்தினி என்னிடம், ‘நீயே வாங்கு. இனிமேல் உன்னால் இப்படி சுதந்திரமாக எந்த உணவகத்திலும் நுழைய முடியாது’ என்று சொன்னது அபத்தமாக தோன்றியது. என்னை அடையாளம் கண்டு பேச விரும்புவார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. உண்மையில் எனக்கு அந்த விருப்பமும் கிடையாது. சிறிய, மாறுபட்ட படங்களில் நடிக்க வேண்டும். யாரும் அறியாத ஒருவராக சுதந்திரமாக இருக்க வேண்டும். வாக்கிங் செல்ல வேண்டும். தனியாக அமர்ந்து புத்தகம் படிக்க வேண்டும் என்பதே எனது ஆசைகளாக இருந்தது. ஆனால், ‘அலா மொதலைந்தி’ படம் வெளியான பிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. எனது தனி மனித சுதந்திரம் பறிபோய்விட்டது’ என்றார்.