ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்காதீர்கள்: ஆர்.வி.உதயகுமார் அட்வைஸ்
சென்னை: லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனீஷ்காந்த், தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா நடித்திருக்கும் படம், ‘ரெட் லேபில்’. ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். பொன்.பார்த்திபன் கதை எழுதி இருக்கிறார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்ய, கைலாஷ் மேனன் இசை அமைத்துள்ளார். கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழாவில் பேரரசு, எஸ்.எழில், வசந்தபாலன், மித்ரன் ஆர்.ஜவஹர், அனுமோகன்
பங்கேற்றனர்.
அப்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது:கடந்த 10 வருடங்களாகவே சிறந்த கதை கொண்ட படங்கள் வருவதில்லை. ‘பாசமலர்’, ‘குடும்பம் ஒரு கதம்பம்’ போன்ற கதைகள் இப்போது எங்கே வருகிறது? அப்போது படம் பார்த்துவிட்டு வந்தால், அதுபற்றி திண்ணையில் அமர்ந்து விமர்சனம் செய்வார்கள். படம் நன்றாக இருந்தால், மாட்டு வண்டியை கட்டிக்கொண்டு குடும்பத்துடன் தியேட்டருக்கு செல்வார்கள். இப்போது அப்படியில்லை. அனைவரும் பார்க்கும்படி படம் எடுக்கிறார்களா? ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்காமல், அனைவரும் பார்க்கும்படியான வாழ்வியல் கதைகளை வைத்து படம் எடுக்க புதியவர்கள் முன்வர வேண்டும்.
