Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பராசக்தி படத்திற்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஜி.வி.பிரகாஷ் சஸ்பென்ஸ்

சென்னை: டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ள ‘பராசக்தி’ என்ற படம், வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் இன்பன் உதயநிதி உலகம் முழுவதும் வெளியிடுகிறார். இதில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, சேத்தன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

கடந்த 1960களின் வரலாற்று பின்னணியில், மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமையை பற்றி சொல்லும் இப்படம் குறித்து ஸ்ரீலீலா கூறுகை யில், ‘படத்தில் நான் நடித்த வலிமையான கேரக்டரை எனக்கு தந்த தற்காக சுதா கொங்கராவுக்கு பெரிய நன்றி. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி ஆகியோர் மிகவும் இனிமை யானவர்கள். சிறப்பான தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது ஆசை ‘பராசக்தி’ படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது’ என்றார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் கூறும்போது, ‘எனது திரைப்பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. முதல் படத்தை கொடுத்த இயக்குனர் வசந்தபாலனுக்கும், 100வது படம் கொடுத்த இயக்குனர் சுதா கொங்கராவுக்கும் நன்றி. அவர் இயக்கிய ‘சூரரைப்போற்று’ மூலம் எனக்கு முதல் தேசிய விருது கிடைத்திருந்தது. ‘பராசக்தி’ படத்தை அவருக்காகத்தான் நான் ஒப்புக்கொண்டேன்.

இதில் மிக முக்கியமான ஒரு விஷயத்தை ஒளித்து வைத்திருக்கிறோம். அதை இன்றளவும் பாதுகாத்து வருகிறோம். இப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். நீண்ட காத்திருப்புக்கு பிறகு எனக்கு தேசிய விருது கிடைத்தது. ‘வெயில்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அசுரன்’ போன்ற படங்களில் எனக்கு தேசிய விருது தவறிவிட்டதாக சொன்னார்கள்.

பிறகு சுதா கொங்கராவின் ‘சூரரைப்போற்று’ மூலம் தேசிய விருது கிடைத்தது. ஒரு சகோதரியின் மூலம் தேசிய விருது கிடைத்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்றார். இயக்குனர் சுதா கொங்கரா கூறுகையில், ‘எனது குருநாதர் மணிரத்னம், ‘நம் வாழ்க்கையில், இது முடியாது என்று சொல்லும் போது மட்டும்தான் அதைச் செய்து காண்பிக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்.

‘பராசக்தி’ படத்தை உருவாக்க முடியாது என்று நினைத்தபோது, அதைச் செய்து காண்பிக்க வேண்டும் என்று தோன்றியது. இப்படத்தை உருவாக்க எனக்கு துணை நின்ற பராசக்திகளுக்கு நன்றி. இனி நான் ‘பராசக்தி’யை பற்றி பேச விரும்பவில்லை. படத்தை பார்த்துவிட்டு ரசிகர்களும், மக்களும்தான் பேச வேண்டும். அவர்கள் பேசுவதே எனது பேச்சாக இருக்க வேண்டும். ரசிகர்களாகிய நீங்கள்தான் திரையுலகை வாழ வைக்க வேண்டும். அது உங்கள் கையில்தான் இருக்கிறது’ என்றார்.