Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பரிமளா அண்ட் கோ விமர்சனம்...

கடற்கரை குப்பத்தில் வசிக்கும் வர்கீஸ் என்கிற மிகப்பெரிய ரவுடி சாண்டி, பரிமளா என்கிற ஜெயராம், சுதந்திரம் என்கிற ஊர்வசியின் மகள் அனந்திகா சனில்குமாரை காதலிக்கிறார். அவரை காதலிக்காத மாதிரி நடிக்கும் அனந்திகா சனில்குமார், ஒருகட்டத்தில் காதலிப்பது போல் மனம் மாறுகிறார். இதையறிந்து கொதிக்கும் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், சாண்டியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகின்றனர்.

அப்போது கடற்கரையில் சாண்டியின் சடலத்தை கைப்பற்றும் போலீஸ் அதிகாரிகள் மிஷ்கின், ஜி.கே.எம்.தமிழ்குமரன் ஆகியோர், ஜெயராம் குடும்பத்தினர் மீது சந்தேகப்பட்டு விசாரிக்கின்றனர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவருகிறது. அது என்ன? சாண்டியை கொன்றது யார் என்பது மீதி கதை. 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கும் ஜெயராம், ஊர்வசி இருவரும் தங்கள் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி, இறுதிவரை ஆடியன்ஸை சிரிக்க வைக்கின்றனர்.

அவர்களின் மகள்களாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார் பொருத்தமான தேர்வு. அவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். வில்லன் சாண்டி, கொலையை துப்புதுலக்கும் மிஷ்கின், ஜி.கே.எம்.தமிழ்குமரன், மகனின் சாவுக்கு பழிவாங்க துடிக்கும் காயத்ரி, வீட்டு உரிமையாளர் யோகி பாபு மற்றும் சென்ராயன், சிங்கம்புலி, பக்ஸ், பூர்ணிமா ரவி, பி.எல்.தேனப்பன், சந்தோஷ் சோபன் ஆகியோரும் கதையை நகர்த்த உதவியுள்ளனர்.

வழக்கமான பாணியில் இருந்து விலகி, முழுநீள டார்க் காமெடி படத்தை எழுதி இயக்கியுள்ள பாண்டிராஜ், ‘திரிஷ்யம்’ மற்றும் ‘பாபநாசம்’ பாணியில் ஒரு படத்தை கொடுக்க முயற்சித்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், பாக்ஸன் பின்னணி இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. போதையால் சீரழியும் சமூகத்தை பற்றிய அக்கறையுடன் படத்தை உருவாக்கியதை பாராட்டலாம். நீளமான வசனங்கள் ஒருகட்டத்தில் சோர்வு தருவதை குறிப்பிட்டாக வேண்டும்.