நிதேஷ் திவாரி இயக்கியுள்ள 2 பாகங்கள் கொண்ட பான் இந்தியா படம், ‘ராமாயணா’. இதன் முதல் பாகம், வரும் தீபாவளி பண்டிகையன்று திரைக்கு வருகிறது. ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், ஹான்ஸ் ஸிம்மர் முதல்முறையாக இணைந்து இசை அமைத்துள்ளனர். ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் நடித்துள்ளனர். சூர்ப்பனகையாக நடித்துள்ள ரகுல் பிரீத் சிங்கிடம் ஒரு ரசிகர், ‘சூர்ப்பனகை போன்ற கடினமான ஒரு கேரக்டரில் நடித்ததற்கு பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டு, இதுபோன்ற சவாலான ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த ரகுல் பிரீத் சிங், ‘நான் சூர்ப்பனகையாக நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம், நீங்கள் குறிப்பிட்ட அந்த சிக்கலான தன்மைதான். வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சம்பவத்துக்காக மட்டுமே அவர் நினைவுகூறப்படுகிறார். ஆனால், அவரது கதைக்கு பின்னால் அதைவிட நிறைய விஷயங்கள் மறைந்திருக்கின்றன. ஒரு நடிகையாக, மக்களின் பார்வையை மாற்றக்கூடிய மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதுதான் எனக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது. ‘ராமாயணா’ படம் திரைக்கு வரும்போது, ரசிகர்கள் அனைவரும் திறந்த மனதோடு இந்த சூர்ப்பனகை கேரக்டரை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.
