Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

செம்பருத்தி டீ பதிவால் பலத்த சர்ச்சை; நயன்தாரா சொல்வது எல்லாமே பொய்: டாக்டர் கடும் தாக்கு

சென்னை: பல நடிகைகள் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் போட்டோ மற்றும் வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவது மட்டுமின்றி, உணவு பழக்கவழக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான டிப்ஸ்களையும் வழங்கி வருகின்றனர். அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவர்கள் இப்படி செய்து வருவது குறித்து சில மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சிலர் அப்பதிவுகளை மேற்கோள் காட்டி, சில நடிகைகளுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகை சமந்தா இதுபோன்ற சர்ச்சையில் சிக்கி விளக்கம் அளித்தார். அடுத்து நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கு தவறான தகவல் அளித்துள்ளதாக, லிவர் டாக்டர் தனது எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நயன்தாரா தனது பதிவில், ‘செம்பருத்தி டீ குடிப்பது உடம்புக்கு மிகவும் நல்லது’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் செம்பருத்தி டீ குடித்து வருவதாகவும், செம்பருத்தி டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பட்டியலிட்டுள்ளார். இந்த டீயை தனக்குப் பரிந்துரை செய்த ஜீனியஸை டேக் செய்து, ரெசிபி வேண்டுமானால் அவரிடம் கேட்டுக்கொள்ளும்படி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது ஃபாலோயர்கள், ‘இது சூப்பர் தகவல். நாங்களும் செம்பருத்தி டீ குடித்துப் பார்த்துவிட்டு சொல்கிறோம்’ என்று வரவேற்று பதிவிட்டுள்ளனர். இந்நிலையில், நயன்தாராவின் பதிவைப் படித்த லிவர் டாக்டர், இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

லிவர் டாக்டர் கூறுகையில், ‘சமந்தாவை விட அதிக ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நயன்தாரா, தன்னைப் பின்தொடரும் 8.7 மில்லியன் ஃபாலோயர்களுக்கு செம்பருத்தி டீ குறித்து தவறான தகவலை அளித்திருக்கிறார்.

செம்பருத்தி டீ சுவையானது என்பதுடன் அவர் நிறுத்தியிருந்தால் சரி. ஆனால், ஆரோக்கியம் பற்றி தனக்கு தெரியாததை எல்லாம் பேசியிருக்கிறார். செம்பருத்தி டீ சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவைக்கு நல்லது. ஃப்ளூவில் இருந்து காக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனால், அவர் சொன்ன எதுவும் நிரூபிக்கப்படாதது. டயட் மற்றும் நியூட்ரிஷனில் மாஸ்டர்ஸ் டிகிரி வைத்திருக்கும் தனது செலிபிரிட்டி நியூட்ரிஷனிஸ்ட்டுக்கு விளம்பரம் கொடுப்பதற்காகவே இப்பதிவை வெளியிட்டது போல் தெரிகிறது’ என தெரிவித்துள்ளார்.