தனது பெயரில் பணமோசடி பாடகி சித்ரா பரபரப்பு புகார்
சென்னை: தனது பெயரில் பணமோசடி நடப்பதாக பாடகி சித்ரா பரபரப்பு புகார் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் பாடகி சித்ராவின் பெயரில் சில மர்ம நபர்கள் மோசடி விளம்பரம் ஒன்றை பதிவு செய்துள்ளனர். அந்த விளம்பரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தூதராக சித்ரா இருப்பதாகவும் அதில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்து பங்குகளை பெற்றால் அதன் மதிப்பு ஒரே வாரத்தில் 50 ஆயிரம் ஆக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இதன் முதலீடு செய்பவர்களுக்கு ஐபோன் பரிசாக தரப்படுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தைப் பற்றி அறிந்ததும் சித்ரா கூறுகையில், ‘இது எனது பெயரில் தரப்பட்டுள்ள போலி விளம்பரமாகும். மக்கள் உஷாராக இருங்கள். தேவையில்லாமல் இதில் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். மோசடி நபர்கள் மக்கள் பணத்தை திருட்டுத் தனமாக பறிக்க நினைக்கிறார்கள். இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருகிறேன்’ என்றார்.
