கோவை: சிதாரா எண்டர்டெயின்மெண்ட், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவர நாகவம்சி, சாயி சவுஜன்யா இணைந்து தயாரித்துள்ள படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது. வெங்கி அட்லூரி எழுதி இயக்கியுள்ளார். சூர்யா, மமிதா பைஜு நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், கோவை தனியார் கல்லூரி வளாகத்தில், பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசியதாவது: சமீபத்தில் எனது பிறந்தநாளை நான் கொண்டாடவில்லை. ஆனால், எனது ரசிகர்கள் 5,000 பேர் ரத்த தானம் செய்தீர்கள். 40,000 பேர் நலத்திட்ட உதவிகளை வழங்கினீர்கள். கோவை நான் பிறந்த மண். கடந்த ஆண்டு மகள் தியா, மகன் தேவ் ஆகியோரை இங்கு அழைத்து வந்து, பழைய விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன்.
நாம் டிஜிட்டல் ஸ்கிரீனுடன் செலவழிக்கும் நேரம் அதிகரித்து, குடும்ப உறுப்பினர்களுடன் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. எனவே, தயவுசெய்து உங்கள் குடும்பத்தினருக்கான நேரத்தை இன்னும் அதிகமாக செலவிடுங்கள். நினைவுகளை உருவாக்கி சேமியுங்கள்.
அதெல்லாம் சொந்த ஊரில் இருக்கும்போதுதான் கிடைக்கும். அதை ஒருபோதும் தவறவிடாதீர்கள். ‘சூரரைப்போற்று’ படத்துக்கு தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசை அமைத்துள்ளார். தொடர்ந்து என்மீது அவர் செலுத்தும் நிபந்தனையற்ற அன்பிற்கு நன்றி. இதில் மமிதா பைஜு நடிப்பில் ஒரு மேஜிக் செய்துள்ளார். அவரே டப்பிங் பேசியிருக்கிறார்.
