Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘திரிஷ்யம் 3’ல் நடிக்க வெங்கடேஷ் மறுப்பு

மலையாளத்தில் ’திரிஷ்யம்’ படத்தின் முதல் பாகத்தில் தொடங்கிய கதை, அதன் 3வது பாகத்தில் முடியும் என்று சொல்லியிருந்த இயக்குனர் ஜீத்து ஜோசப், தற்போது ‘திரிஷ்யம் 3’ படத்தை இயக்கி முடித்துள்ளார். மோகன்லால், மீனா நடித்துள்ள இப்படம், வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி திரைக்கு வருகிறது. ’திரிஷ்யம்’ படத்தை ‘பாபநாசம்’ என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் தமிழிலும், ‘திருஷ்யம்’ என்ற பெயரில் வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கிலும், ‘டிரிஷ்யம்’ என்ற பெயரில் அஜய் தேவ்கன் நடிப்பில் இந்தியிலும், ‘திரிஷ்யா’ என்ற பெயரில் வி.ரவிச்சந்திரன் நடிப்பில் கன்னடத்திலும் ரீமேக் செய்திருந்தனர்.

பிறகு தமிழை தவிர்த்து இதர மொழிகளில் ‘திரிஷ்யம்’ படத்தின் 2வது பாகம் ரீமேக் செய்யப்பட்டது. ‘திரிஷ்யம்’ படத்தின் 3வது பாகத்துக்கான ரீமேக் பணிகள் இந்தியில் தொடங்கியுள்ளது. ஆனால், தெலுங்கில் ‘திரிஷ்யம்’ படத்தின் 3வது பாகத்துக்கான ரீமேக்கிற்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம், ‘சங்கராந்திகி வஸ்துனம்’, ‘மன சங்கர வர பிரசாத் காரு’ ஆகிய படங்களின் வெற்றியால் வெங்கடேஷ் சம்பளத்தை உயர்த்திவிட்டார். அதே சம்பளத்தை ‘திரிஷ்யம்’ படத்தின் 3வது பாகத்தின் ரீமேக்கிற்கு கேட்டதாக கூறப்படுகிறது.

அந்த சம்பளத்தை கொடுத்து உருவாக்கினால் பலத்த நஷ்டம் ஏற்படும் என்பதால், தற்போது மிகப்பெரிய சிக்கலில் படக்குழு தவித்து வருகிறது. இந்த விஷயத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.