திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல நடிகர் மோகன்லாலின் வீட்டில், கடந்த 2012ம் ஆண்டு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து 4 யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். அவற்றை வீட்டில் வைத்திருக்க மோகன்லால் உரிய லைசென்ஸ் பெறவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக மோகன்லால், அவருக்கு தந்தங்களை கொடுத்த திருச்சூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் உள்பட 4 பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் வனத்துறை சட்டங்களில் சில மாற்றங்கள் செய்து மோகன்லாலுக்கு தந்தங்களை வைத்திருக்க லைசென்ஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மீதான வழக்கை வனத்துறை ரத்து செய்தது. வனத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. நேற்று இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது மோகன்லால் உள்பட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், அவர்கள் அனைவரும் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.