வெளியூரில் தங்கி படித்து வந்த சாரா அலிகான் 15 வருடங்களுக்கு பிறகு தனது அரண்மணைக்கு வருகிறார். ராஜகுடும்பத்தை சேர்ந்த அவர் ஒரே வாரிசு. விபத்து ஒன்றில் தாயை பறிகொடுத்துவிட்டு தானும் நடக்கும் சக்தியை இழந்தவர் சாரா. வீட்டுக்கு வந்த இடத்தில் பிசினஸ் விஷயமாக அப்பா வெளியூருக்கு சென்றுவிட்டதாக சொல்கிறார் சித்தி சித்ரங்கடா சிங். ஆனால் சாராவுக்கு தன் தந்தை குறித்து சந்தேகம் எழுகிறது.
இரவு நேரங்களில் அந்த அரண்மனையில் தன் தந்தையின் ஆவி உலா வருவதை உணர்கிறார். தன் சித்திதான் சொத்துக்கு ஆசைப்பட்டு தந்தையை கொன்று விட்டதாக கருதும் சாரா, அரண்மனையின் விசுவாசியான விக்ரந்த் மாஸேவுடன் இணைந்து உண்மையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.
இது வரை வழக்கமான கதைதான். ஆனால் இதன் பிறகு இந்த கதை இப்படித்தான் முடியும் என்று சில விஷயங்கள் தோன்றும், ஆனால் அப்படியில்லை. இதன் அடுத்த பகுதி யாரும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபர திரைக்கதையுடன் அமைந்திருக்கும்.
ஒருசில கேரக்டர்களை வைத்துக்கொண்டு பக்காவான ஒரு மர்டர் மிஸ்ட்ரி படம் தந்திருக்கிறார் பர்வீன் கிர்பலானி. சாரா அலிகான் தனியொருத்தியாக படத்தை தாங்கிப் பிடிக்கிறார். விக்ராந்த் மோசே, சித்ரங்கடாவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். ராகுல்தேவ் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஆனால் அவருக்கு பெரிதாக வேலை இல்லை.
பிரமாண்ட அரண்மணையை திகிலுடன் காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராகுல்தர்மன். 111 நிமிடம் திகில் அனுபவத்தை தரும் இந்தப் படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது.