மும்பை, ஜூன் 23: பல்வேறு மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள ஜெனிலியா (37), தமிழில் ‘பாய்ஸ்’, ‘சச்சின்’, ‘சென்னைக் காதல்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘உத்தமபுத்திரன்’, ‘வேலாயுதம்’ போன்ற படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் ‘பொம்மரில்லு’ என்ற படத்தில் நடித்து, சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். ஜெனிலியா உச்ச நடிகையாக இருந்தபோது, 2012ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரியான், ரஹில் ஆகிய மகன்கள் இருக்கின்றனர்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்த ஜெனிலியா, 2022ல் தெலுங்கு படத்தில் மீண்டும் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் வெளியான ‘சிதாரே ஜமீன் பர்’ என்ற இந்தி படத்தில் ஆமிர் கானுடன் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் ஜெனிலியா அளித்த ஒரு பேட்டியில், ‘தென்னிந்திய படங்களில் எனக்கு எப்போதுமே மிகச்சிறந்த கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டன. இங்கு எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்காக நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
நடிப்பு உள்பட பல்வேறு விஷயங்களை நான் கற்றுக்கொண்ட இடம் அதுதான். ஐதராபாத்தில் ஹாசினி என்றும், தமிழில் ஹரிணி என்றும், மலையாளத்தில் ஆயிஷா என்றும் எனது கதாபாத்திரங் களின் வழியாகவே தென்னிந்திய ரசிகர்கள் என்னை நினைவில் வைத்திருக்கின்றனர். அதை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’ என்று நெகிழ்ந்தார்.