மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்த மாளவிகா மோகனன், இன்னும் கூட தமிழில் சரளமாகப் பேச முடியாமல் தவிக்கிறார். ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் நடித்த அவர், பிறகு விஜய் ஜோடியாக ‘மாஸ்டர்’, தனுஷ் ஜோடியாக ‘மாறன்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் விக்ரம் ஜோடியாக நடிக்கிறாரா என்பது பற்றி தெரியவில்லை. இப்படத்தில் ஒப்பந்தமானதில் இருந்து தனக்கு நடிப்பு சம்பந்தமாக விக்ரம் நிறைய டிப்ஸ் தருவதாகச் சொல்லும் மாளவிகா மோகனன், விக்ரமின் நடிப்பு தன்னை ஆச்சரியப்படுத்துவதாகவும் சொன்னார். மேலும் அவர் கூறுகையில், ‘இதுவரை நான் பல மொழிப் படங்களில் நடித்திருக்கிறேன்.
ஆனால், ‘தங்கலான்’ படம்தான் எனக்கு ஸ்பெஷல். நான் நடித்த படங்களிலேயே இப்படத்தை முக்கியமான படமாகச் சொல்வேன். காரணம், இப்படத்தில் நான் ஏற்றுள்ள கேரக்டருக்காக என்னை மிகவும் வருத்திக்கொள்கிறேன். கடும் வெயிலில் நின்று உழைக்கிறேன். குறிப்பாக, நான் ஏற்றுள்ள கேரக்டருக்காக சிலம்பம், ஜிம்னாஸ்டிக், ஜம்ப்ஸ், ரோலிங், கிக்ஸ் உள்பட பல கலைகளுக்கான தீவிர பயிற்சிகளை மேற்கொண்டேன். பீரியட் பிலிமாக உருவாகும் இப்படத்தில் எனக்கு அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் நிறைய இருக்கிறது. இப்போதே நான் உறுதியாகச் சொல்கிறேன், ‘தங்கலான்’ படம் தமிழ்த் திரையுலகில் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்’ என்றார்.