சென்னை: அஜித் – விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் வார்த்தை போரே நடத்தி வருகின்றனர். அஜித்தும் விஜய்யும் ரசிகர்களிடம், இது மாதிரியான சண்டை தேவை இல்லாதது என்றும் தாங்கள் எப்போதும் நல்ல நண்பர்கள் என்பதையும் கூறியுள்ளனர். இருப்பினும் இருவரின் புது படங்கள் ரிலீசாகும்போது, டீசர், டிரெய்லர் வெளியாகும்போது நீயா நானா என்பது போல் ரசிகர்களின் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இந்த பிரச்னை குறித்து தன் கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்றோர் கலந்து கொண்ட ஓர் நிகழ்ச்சியில் இக்கருத்தை மணிரத்னம் கூறியுள்ளார். அதில் அவர், ‘ரசிகர்களுக்கிடையேயான இது போன்ற மோதல்கள் தேவையற்றது. அது உணர்வுபூர்வமாக இருக்காது. சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மோதிக் கொள்வது தெருவில் சண்டை போடுவது போல் இருக்கிறது. எதிர்மறை எண்ணங்களை தான் சோசியல் மீடியாவில் பகிர்கின்றனர். முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்காமல் தேவையற்ற காரணங்களை பெரிதாக எண்ணி மோதிக் கொள்கின்றனர்’ என்று தன் கருத்தை தெரிவித்துள்ளார்.