சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது. இப்படத்தை திவ்யா மாரி செல்வராஜ், டிஸ்னி ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளன. ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், “முதன்முதலில் நான் படம் இயக்கலாம் என நினைத்த படம் ‘வாழை’. ரூ.50 லட்சம் இருந்தால் படம் எடுத்துவிடலாம் என்ற நிலையில் இருந்தேன்.
இதை உடனே இயக்க முடியாததால் ‘வாழை’ என் மனதை அழுத்திக் கொண்டிருந்தது. அப்படித்தான் இப்படம் தொடங்கியது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வாழை எனது சொந்த கதை. நான் பட்ட கஷ்டங்களை நீங்கள்பட வேண்டும் என்று கூறி நடிகர்களிடம் வேலை வாங்கினேன். கலையரசன் 100 கிலோ வாழையை தலையில் சுமந்திருந்தார். திவ்யா துரைசாமி 60 கிலோ எடையை தூக்கினார். கடுமையாக உழைத்தனர். பார்க்கவே பாவமாக இருக்கும்.
என் வாழ்வில் நடந்த ஆகப்பெரும் துயரத்தை மனைவி திவ்யா தயாரிப்பார் என நான் நினைத்துப் பார்த்து கிடையாது. பிரமிப்பாக இருக்கிறது. என்னைப்பற்றி நிறைய கேள்விகள் உங்களிடம் இருக்கும். என்னை நீங்கள் புரிந்துகொள்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட எனது கனவுப் படம் இது” என்றார். இயக்குனர்கள் ராம், பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நிகிதா விமல், கலையரசன், கலைப்புலி தாணு உள்பட பலர் பங்கேற்றனர்.