கடந்த 2013ல் கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. அதை மனதில் கொண்டு கமல்ஹாசன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘மற்றவர்களுக்கு முன்பே ஓடிடி தளங்களின் வருகை குறித்து நான் கணித்துவிட்டேன். அப்போது நான், இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னேன். அதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அன்று நான் சொல்ல முயன்றதை இன்று அனைவரும் புரிந்துகொண்டனர். இந்திய ரசிகர்களுக்கு சர்வதேச அளவிலான சினிமா ரசனை ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, உங்களிடம் இலக்கியத்தில் எம்.ஏ டிகிரி இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதனால் மட்டுமே நீங்கள் ஒரு மிகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளராகி விட முடியாது. இது ஒரு வித்தியாசமான கலை. ஷேக்ஸ்பியர் இப்போது இருந்தால், திரைக்கதை எழுத சில பயிற்சிப்பட்டறைகளில் கலந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். நான் ஒரு சினிமா ரசிகன். நான் பார்க்க விரும்பும் படங்களை உருவாக்க விரும்புகிறேன். சிலநேரம் அவற்றில் நானே நடிக்கிறேன். அல்லது நான் நடிக்காமல், தயாரிக்க மட்டும் செய்கிறேன். இப்போது இரண்டு படங்கள் தயாரிக்கிறேன். பணத்தைச் செலவழிப்பது தவிர அப்படங்களுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்றார்.