பெங்களூரு: கன்னட நடிகை ராகினி திவேதி, தமிழில் ‘அறி யான்’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் ‘கிக்’ படத்தில் சந்தானத்துடன் நடித்து வருகிறார். கடந்த 2014ல் அவர் நடித்த ‘ராகினி ஐபிஎஸ்’ என்ற கன்னடப் படம் திரைக்கு வந்தது. கே.மஞ்சு தயாரித்திருந்த இப்படத்தின் அடுத்த பாகம், ‘ராகினி ஐபிஎஸ் வெர்சஸ் ஐஏஎஸ்’ என்ற பெயரில் உருவாகிறது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது ஊழல் புகார் வெளியிட்டார். இதையடுத்து மைசூரு போலீசாரிடம் புகார் அளித்த ஐஏஎஸ் அதிகாரி, அந்த ஐபிஎஸ் அதிகாரியை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து கர்நாடக அரசு இருவரையும் பணியிடம் மாற்றம் செய்தது. இருவருக்கும் துறை ஒதுக்காமல், காத்திருப்போர் பட்டியலில் வைத்தது. இந்நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகளின் மோதல் குறித்த சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ‘ராகினி ஐபிஎஸ் வெர்சஸ் ஐஏஎஸ்’ என்ற படத்தில் ராகினி திவேதி நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
194