ஸ்டோன் பெஞ்ச் க்ரியேஷன்ஸ் மற்றும் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , பிரகாஷ் ராஜ், ஜெயராம், நாசர், கஜராஜா, விது, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ ரெட்ரோ ‘.
அடிதடி, கொள்ளை, கடத்தல் என வாழ்கிறார் பாரி என்கிற பாரிவேல் கண்ணன் ( சூர்யா). சிரிப்பு , சந்தோஷம் என்றால் என்னவென்றே தெரியாத மனிதன். இத்தனைக் காலமும் தன் வளர்ப்பு ஆப்பாவிற்காக தவறான வாழ்க்கை வாழ்ந்த பாரிக்கு ருக்மணி ( பூஜா ஹெக்டே) மீது காதல். ஆனால் இந்தக் கோபம், அடிதடி அனைத்தையும் விட்டுவிட்டு வர வேண்டும் என்கிறார் ருக்மணி. பாரியும் காதலியின் ஆசைக்கிணங்க அமைதியான வாழ்க்கை வாழ முடிவு எடுக்கிறார். பிரச்சனைகள் துவங்குகிறது. மீண்டும் அடிதடி , கொலை என ஜெயிலுக்கு செல்ல ஏமாற்றத்துடன் நாட்டை விட்டே சென்று விடுகிறார் ருக்மணி. ருக்மணியைத் தேடிச் செல்லும் பாரிக்கு அதை விடவும் மிகப்பெரிய கடமை வந்து நிற்கிறது. ஏன் பாரியை சுற்றி இத்தனை பிரச்சனைகள், அவரது காதல் கைகூடியதா இல்லையா என்பது மீதிக் கதை
சூர்யா வழக்கம் போலவே உயிரைக் கொடுத்து நடிக்கிறார். உணர்வைக் கொட்டி காதலிக்கிறார். கார்த்திக் சுப்புராஜின் ப்ரேமில் இன்னும் ஸ்டைலாகத் தெரிகிறார். வருடங்கள் ஆனாலும் அவர் கண்களில் சட்டென வந்து நிற்கும் காதல் கண்ணீரும், ஏக்கமும் அழகு. சூர்யாவிற்கு இவ்வளவு மெனக்கெட்ட படக்குழு பூஜா ஹெக்டேவின் லுக்கிலும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். பூஜா ஹெக்டே அற்புதமான நடிப்பு, உணர்வு என சோடை சொல்ல முடியவில்லை. ஆனால் படத்தின் நாயகியாக அதுவும் ஒரு நாயகன் உயிரைக் கொடுத்து காதலிக்கும் நாயகி என்கிற பட்சத்தில் அந்த நாயகியை எவ்வளவு அழகாக காட்டியிருக்க வேண்டும். அதில் தவறிவிட்டார் இயக்குனர். நோ மேக்கப் லுக் என்பது ஓகே. ஏன் வலிய அவர் சரும நிறத்தையும் குறைத்திருக்கிறார் புரியவில்லை. ஜோஜு ஜார்ஜ் போன்ற இயல்பான நடிகருக்கு இன்னும் வித்தியாசமான கதாபாத்திரங்களை அவருக்குத் தமிழில் கொடுக்கலாம். இந்த படத்திலும் சோடை சொல்ல முடியாத நடிப்பை கொடுத்திருக்கிறார். அவரை அடுத்து சட்டென இடம் பிடிக்கிறார் விது. ஃப்ரஷ் முகமாக ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.எல்‘ படத்திலேயே யானை கொலையாளனாக கவனம் பெற்றவர். இந்தப் படத்தில் அப்படியே நேரெதிர் ஸ்டைலான வில்லனாக யார் இவர் எனக் கேட்க வைக்கிறார். பிரகாஷ் ராஜ், ஜெயராம், நாசர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து முடித்திருக்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய பலம் இசை. அதிலும் கனிமா பாடல் இந்த வருடத்தின் டாப் லிஸ்ட். பின்னணி இசையும் மிக அற்புதம். விஷுவல் ஆக பார்க்கும்பொழுது ‘ கனிமா…’ பாடல் ஆட்டம் போட வைத்தாலும் ‘ கண்ணாடி பூவே…’ பாடல்தான் சூர்யா ஸ்பெஷல். ‘ அஞ்சல…’ ( வாரணம் ஆயிரம் ) பாடலை அசால்ட்டாக கண்முன் கொண்டு வருகிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா சினிமோட்டோகிராபியில் அந்தமான் தீவு கண்களுக்கு விருந்து. கேலரி அடிதடியும் ஹாலிவுட் தரம். ஷாபி முகமது அலி எடிட்டிங்கில் தான் சற்றே தடுமாற்றம் தெரிகிறது. அல்லது இதற்கு மேல் கட் கொடுக்க முடியவில்லையா தெரியவில்லை.
அத்தியாயம் பாணியில் விபரமாகக் கதை சொல்லல் எல்லாம் தற்போது ஓடிடியில் சீரிஸ்களாக களம் இறங்கிவிட்டது. இந்நிலையில் திரைப்படங்களில் இன்னமும் இந்த ஸ்டைல் கடைபிடிப்பது வலிய வந்து பல காட்சிகளை திணித்து படத்தின் நீளத்தை அதிகரித்துக்கொண்டே சென்று இருப்பது தெரிகிறது. எத்தனை காலங்களுக்கு தான் இந்த அடிமைகளாக இருக்கும் கூட்டம் அதைக் காப்பாற்ற வரும் ‘அடிமைப் பெண்‘ கதையை சொல்லிக்கொண்டே இருப்பார்கள் தெரியவில்லை. அதே போல் சூர்யா போன்ற தேர்ந்த நடிகரை இன்னமும் காதலிக்காக கடல் கடந்து செல்வது போல் கட்டுவதும் தேவையா எனத் தோன்றுகிறது. 60ஸ், 80ஸ் என அந்தக் காலத்திலேயே திரைக்கதைகளை ஏன் அமைக்கிறார் என்பதும் புரியவில்லை. படத்தின் மிகப்பெரிய பலம் ஸ்டண்ட். ஸ்டண்ட் கோரியோகிராபர் கிச்சா கம்பக்தி பல இடங்களில் கவனம் பெறுகிறார். மொத்தத்தில் கார்த்திக் சுப்புராஜ் ஸ்பெஷல் கலர்ஃபுல் ரெட்ரோ டோனில் சூப்பர் ஸ்டார் வரை ஆசைப்பட்டு நடித்திருக்கிறார்கள். அந்த பட்டியலில் இப்போது சூர்யா. நிச்சயம் ‘கங்குவா’ கொடுத்த ஏமாற்றத்திற்கு ஆறுதலாக இருக்கும் இந்த ‘ரெட்ரோ’.