சென்னை: சந்தானம் நடிப்பில் இன்று வெளியாகிறது ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ என்ற படம். இந்த படத்தில் ‘சீனிவாசா கோவிந்தா’ என்று தொடங்கும் வகையில் ஒரு பாடல் உள்ளது. உலகில் உள்ள பல கோடி மக்கள் புனிதமாக கருதக்கூடிய பெருமாளின் பக்தி பாடலை சினிமாவுக்காக வேண்டுமென்று பக்தர்களின் மனம் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானுபிரகாஷ்ரெட்டி சார்பில், நடிகர் சந்தானம், தயாரிப்பு நிறுவனமான நிகாரிகா எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
அதில் இந்த படம் வெளியாவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அந்தப் பாடலை நீக்க வேண்டும். ஏழுமலையான் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் வெங்கடேசபெருமாளின் பக்தி பாடலை ரீமிக்ஸ் செய்து பக்தர்கள் மனம் புண்படும் வகையில் செயல்பட்டதற்காக ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும். இதற்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த பாடலை படத்திலிருந்து நீக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.