பாட்னா: பீகாரில் மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகி நிஷா உபாத்யாய் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பீகார் மாநிலம் பாட்னா அடுத்த சரண் என்ற இடத்தில் நடந்த கலாசார நிகழ்ச்சியில், பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யாய் பங்கேற்றார். அவர் மேடையில் பாடல் பாடிக் கொண்டிருக்கும்போது, பார்வையாளர் பக்கத்தில் இருந்து திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. அந்த துப்பாக்கியின் தோட்டா, பாடகியின் இடது தொடையில் பாய்ந்தது. அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாடகியை காப்பாற்ற முயன்றனர். துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் அவர் கீழே சரிந்து விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் பாடகியை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வரவில்லை. இருந்தாலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் யார்?, நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது எவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர். கடந்த மே மாதம், பீகார் மாநிலம் சமஸ்திபூரில் நடந்த திருமண நிகழ்ச்சியின்பாது, ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.