சென்னை: கிரிக்கெட் ரசிகர்களால் ‘சின்ன தல’ என்று அழைக்கப்படுபவர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. அவரை தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தற்போது அவர் தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். லோகன் எழுதி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க, சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் நிறுவனத்துக்காக டி.சரவணகுமார் தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. கிரிக்கெட் வீரர் சிவம் தூபே, எடிட்டர் மோகன், இயக்குனர் மோகன் ராஜா, சதீஷ் கலந்துகொண்டனர்.
பிறகு சுரேஷ் ரெய்னா வீடியோகால் மூலம் பேசினார். அவர் கூறுகையில், ‘தமிழ்நாட்டில்தான் ‘விசில் போடு’ ஆர்மி இருக்கிறது. தமிழ் படத்தில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். இனிமேல்தான் சின்ன தலயின் ஆட்டம் ஆரம்பமாகிறது. எனக்கு சூர்யாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும்’ என்றார். ஏற்கனவே முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமான நிலையில், தற்போது சுரேஷ் ரெய்னாவும் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர்கள் இருவருமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றவர்கள். கடந்த 2022ம் ஆண்டுடன் கிரிக்கெட்டில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வுபெற்றார்.