ஐதராபாத்: தெலுங்கு நடிகர் பிரபாஸ், தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படம் ஜூன் 16ம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பங்களில் இந்தியா முழுவதும் வெளியாகிறது. இந்த படம் ராமாயண கதையை மையமாக கொண்டது. ஆதிபுருஷ் பட டீசர் வெளியாகி அதன் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை படக்குழு மாற்றியமைக்க முடிவு செய்து, படத்தின் ரிலீசை தள்ளிவைத்தது.
அதன்படி இப்படம் வரும் 16ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் பிரபாஸ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவையில் பங்கேற்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி கும்பிட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோயிலில் இருந்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முற்பட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து, அவரை பேட்டரி வாகனத்தில் ஏற்றி கார் வரை பாதுகாப்பாக அழைத்து சென்று அங்கிருந்து காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.