சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பயன்பெறும் வகையில், காற்றின் ஈரப்பதத்திலிருந்து நீர் தயாரித்து அளிக்கும் இயந்திரம் (வாயு ஜெல்) ஒன்றை கமல் பண்பாட்டு மையம் சார்பில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது: இது என் பிறந்தநாள் என்பதை விட இது ஒரு நல்ல நாள். அரசியல், வியாபாரம் எல்லாம் கடந்து மனித நேயம் சம்மந்தப்பட்டது. நல்லவர்கள் எல்லாம் இணைந்து செயல்படும் நல்விழா. அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் மனிதம்சார்ந்து வந்து இருக்கின்றனர். நான் இங்கு இந்த இயந்திரம் வழங்குவதால் மற்ற மருத்துவமனைகளிலும் அரசுக்கு உதவியாக என்னைபோன்றவர்கள் இது போன்று இயந்திரம் வழங்குவார்கள். இது ஐஐடியில் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம். எனவே மற்ற இடங்களில் இது போன்று மாசு இல்லாத குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கான முன்னெடுப்பு என்று நீங்கள் கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும். அனைவருக்கும் கட்சி உள்ளது. ஆனால் எங்களுடைய நல்ல எண்ணம் தான் எங்களை இணைத்துள்ளது. கட்சிக்காக விசுவாசத்தை, மனித நேயத்தை விடக் கூடாது. மனித நேயத்துடன் இது தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.