சினிமாவில் சாதிக்க முயற்சிக்கும் நண்பர்கள் அன்பு மயில்சாமி, அர்ஜூனன் ஆகியோரின் தவறான செயலால், சந்திரிகா ரேவதியின் திருமணம் நின்றுவிடுகிறது. இதனால் சந்திரிகா ரேவதியும், அவரது தந்தை டி.பி.கஜேந்திரனும் விஷம் குடிக்கின்றனர். இதையறிந்த அன்பு மயில்சாமி மனம் வருந்தி, அவமானத்தால் தற்கொலை செய்துகொண்டு எமலோகம் செல்கிறார். அங்குள்ள எமன் நெல்லை சிவா, ‘நீதான் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து, 60 நாட்களுக்குள் திருமணம் நடத்த வேண்டும்’ என்று கட்டளையிடுகிறார்.
பூலோகத்துக்கு உயிருடன் திரும்பி வந்த அன்பு மயில்சாமி என்ன செய்கிறார் என்பது மீதி கதை. கேரக்டரை உணர்ந்து அன்பு மயில்சாமி, அர்ஜூனன், சந்திரிகா ரேவதி ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். மற்றும் ஆர்.சுந்தர்ராஜன், நளினி, சார்லி, மதுமிதா, வையாபுரி, டி.பி.கஜேந்திரன், நெல்லை சிவா, டெல்லி கணேஷ், கோவை செந்தில், டாக்டர் சீனிவாசன், அனுமோகன், மதன்பாப், சங்கிலி முருகன், கராத்தே ராஜா, ஷகீலா, கொட்டாச்சி என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
ஏ.கார்த்திக் ராஜா யதார்த்தமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.சசிகுமார் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நன்கு கைகொடுத்துள்ளன. வி.சுப்பையன் கதை, வசனம் எழுதியுள்ளார். ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், லாஜிக்குகள் பற்றி கவலைப்படாமல் எஸ்.ராஜசேகர் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். நாடக பாணியில் நகரும் சில காட்சிகளில் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம்.