தென்னிந்திய ரசிகர்களை புகழும் நடிகை
பாலிவுட் நடிகை ஸ்ரத்தா தாஸ், இந்தி மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ‘சர்ச்: தி நைனா மர்டர் கேஸ்’ என்ற இந்தி வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் பாடகியாக ஆசைப்பட்டு சினிமாவுக்குள் வந்த இவர் பாதை மாறி நடிகையாகிவிட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தென்னிந்திய சினிமா மற்றும் இந்தி சினிமாவிற்கு இடையிலான வித்தியாசம் பற்றி பேசியுள்ளார். அவர் கூறும்போது, ”எந்தவொரு சினிமா பின்புலமோ, பெரிய அறிமுகமோ இல்லாமல் நான் சினிமாவுக்குள் நுழைந்தேன். தெலுங்கில் கோபிசந்துடன் நான் நடித்த ‘மொகுடு’ படம் என்னை பிரபலமாக்கியது. அதன் பிறகு, நான் பிஸியான நடிகையாகிவிட்டேன். ஹிந்தி மற்றும் தென்னிந்திய சினிமாவிற்கு இடையில் உள்ள பெரிய வித்தியாசம் பிஆர் எனப்படும் மக்கள் தொடர்பு தான். அங்கு பணம் கொடுத்து படங்களை பப்ளிசிட்டி செய்யும் முறையை பயன்படுத்துவதில்லை.
ஒரு படத்தில் கையெழுத்திட்டதும் படப்பிடிப்பு உள்ளிட்ட மற்ற விஷயங்கள் வேகமாக நடக்கும். படக்குழுவை சந்திக்காமல் போனிலேயே படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறேன். ஆனால் இந்தி சினிமாவில் எல்லாமே மெதுவாக தான் நடக்கும். நீங்கள் தொடர்ந்து ரசிகர்கள் பார்வையில் இருக்க வேண்டும். தென்னிந்தியாவில் ரசிகர்கள், சினிமா கலைஞர்களுடன் ஒன்றி இருப்பார்கள். ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடித்திருந்தால் கூட அந்த நடிகைகளை அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். பல மைல் தூரம் கடந்து சென்று அவர்கள் படத்தை பார்ப்பார்கள். இந்த வகையான விசுவாசமான ரசிகர்கள் கிடைப்பது மிகவும் அரிது” என்றார்.
