படப்பிடிப்பில் பாடலை கேட்டு சாமி ஆடிய பெண்கள்: நடிகை ஓட்டம்
சென்னை: மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தை சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான ‘பிங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், ஆண்சி, சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.எம் அசார், இசை. பாஸ்கர், ஒளிப்பதிவு.
இப்படம் வலைத்தளங்களை வைத்து சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. சமீபத்தில் ‘இரவின் விழிகள்’ படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். படப்பிடிப்பில் ‘வாடா கருப்பா’ என்கிற பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. இந்த பாடல ஏற்படுத்திய அதிர்வில் அந்த பகுதியில் இருந்த பெண்கள் சிலருக்கு இயல்பாகவே சாமி வந்து ஆடத் துவங்கி விட்டனர். நாயகி நீமா ரே இதை பார்த்து மிரண்டு போய் படப்பிடிப்பிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தியதில் மறுநாள் படப்பிடிப்புக்கு வந்து இயல்பு நிலைக்கு மாறினாராம் நீமா ரே. இந்த மாத இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் படம் வெளியாகும்.