60வது பிறந்தநாள் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் ஷாருக்கான்
மும்பை: முன்னணி நடிகர் ஷாருக்கானுக்கு நேற்று 60வது பிறந்தநாள். மும்பை மன்னத் பங்களாவில் ஆண்டுதோறும் ரசிகர்களை சந்தித்து கையசைப்பதை வழக்கமாக வைத்திருந்த ஷாருக்கான், நேற்று மன்னத் பங்களா முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களை சந்திக்கவில்லை. கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, ரசிகர்களை சந்தித்து கையசைக்க வேண்டாம் என்று, மும்பை நகர போலீஸ் அதிகாரிகள் ஷாருக்கானுக்கு அறிவுறுத்தினர். அதை ஏற்ற ஷாருக்கான், ரசிகர்களை சந்திக்க முடியாததற்கு மன்னிப்பு கேட்டார்.
இதுகுறித்து நேற்றிரவு ஷாருக்கான் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்காக காத்திருந்த அன்பான ரசிகர்களை என்னால் சந்தித்து பேச முடியாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். அனைவரிடமும் எனது மனப்பூர்வமான மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். கூட்ட கட்டுப்பாட்டு பிரச்னை காரணமாகவும், அனைவருடைய பாதுகாப்புக்காகவும் இந்த கட்டுப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை புரிந்துகொண்ட ரசிகர்களுக்கு நன்றி. என்னை நம்புங்கள். உங்களை சந்திக்க முடியாமல் போனதை உங்களை விட நான்தான் மிகவும் மிஸ் செய்கிறேன். அனைவரையும் சந்திப்பதற்கும், அன்பை பகிர்ந்துகொள்வதற்கும் அதிக ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். மாஃபியா வேடத்தில் அவர் நடிக்கும் ‘கிங்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது.
