தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கேமரா என்னை அழைக்கிறது: மம்மூட்டி நெகிழ்ச்சி

சென்னை: கடந்த சில மாதங்களாக மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு குடல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் அவர் நடித்து வந்த படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்து, நீண்டகாலமாக ஓய்வில் இருந்தார். தற்போது அவர் புற்றுநோயிலிருந்து மீண்டு விட்டதாக அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர். சென்னையில் இருந்துதான் அவர் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது மம்மூட்டி நலமுடன் கேரளாவிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பியதற்கு கேரள அரசியல் தலைவர்கள், மலையாளத் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். இதையடுத்து அவர் மீண்டும் நடிக்க களமிறங்குகிறார். இதனை மம்மூட்டியே அவரது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘‘சிறிய இடைவெளிக்குப் பிறகு, நான் வாழ்க்கையில் மிகவும் விரும்பும் விஷயத்திற்குத் (நடிப்பதற்கு) திரும்பி வருகிறேன். என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை. கேமரா என்னை அழைக்கிறது’’ என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.