கர்நாடக அமைச்சர் மீதான வழக்கில் குட்டி ராதிகாவிடம் போலீசார் விசாரணை
பெங்களூரு: கர்நாடகத்தில் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்து வருபவர் ஜமீர் அகமதுகான். இவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் கடந்த 2019-ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தெரியவந்தது. இந்த சொத்து குவிப்பு வழக்கு லோக் அயுக்தாவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. லோக் அயுக்தா போலீஸ் விசாரணையின்போது தான் யாரிடம் எல்லாம் கடன் வாங்கி இருந்தேன் என்பது தொடர்பான பட்டியலை ஜமீர் அகமதுகான் கொடுத்திருந்தார். அந்த பட்டியலில் நடிகை குட்டி ராதிகாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அவரிடம் இருந்து ரூ.2.50 கோடி கடன் வாங்கி இருப்பதாக ஜமீர் அகமதுகான் கூறியிருந்தார்.
இதையடுத்து, குட்டி ராதிகா விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி லோக் அயுக்தா போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்திருந்தனர். அதன்படி, அவரும் நேற்று முன்தினம் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். அப்போது ஜமீர் அகமதுகானுக்கு ரூ.2.50 கோடி கடன் கொடுத்ததை குட்டி ராதிகா ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் கடந்த 2012-ம் ஆண்டு சமீகா எண்டர்பிரைசஸ் நிறுவனம் மூலமாக லக்கி என்ற படம் தயாரித்ததாகவும், அந்த படத்தின் மூலம் கிடைத்த லாபத்தை மந்திரி ஜமீர் அகமதுகானிடம் கடனாக கொடுத்ததாகவும் குட்டி ராதிகா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த கடன் விவகாரம் தொடர்பான விசாரணையை குட்டி ராதிகாவிடம் நடத்தி முடித்திருப்பதாகவும், தேவைப்பட்டால் மீண்டும் அவரிடம் விசாரிக்கப்படும் என்றும் லோக் அயுக்தா போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குட்டி ராதிகா, தமிழில் வெளியான ‘இயற்கை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். தமிழில் பல படங்களில் நடித்தார். அவர் கன்னட சினிமாக்களில் நடித்து வருவதுடன், படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மனைவி ஆவார்.