கொழும்பு ஏர்போர்ட்டில் சலசலப்பு: ரகசியமாக தமன்னா வெளியேறியது ஏன்?
கொழும்பு: நடிகை தமன்னா, நேற்று முன்தினம் மாலை கொழும்புவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் வருவதை அறிந்து மீடியாவினர் ஏர்போர்ட்டுக்கு வெளியே காத்திருந்தனர். ஆனால் வருகை முனையத்தில் இருந்து மீடியாவினரை எதிர்கொள்ள தமன்னா மறுத்துவிட்டார். மீடியாவை சேர்ந்தவர்களின் வரவை கவனித்த தமன்னா, அங்கிருந்து திரும்பிச் சென்று மீடியா முன் தோன்றுவதைத் தவிர்த்தார். பிறகு வேறொரு வழியாக அங்கிருந்து யாரையும் சந்திக்காமல் வெளியேறினார். அந்த நேரத்தில் அவர் துளியும் மேக்அப் இல்லாமல் இருந்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது மேனேஜரிடம் கூறி, அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் பேசியுள்ளார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் வந்து, தமன்னாவை வேறொரு வழியாக அங்கிருந்து அழைத்துச் சென்று கார் வரை சென்றுவிட்டு வந்தனர் என தமன்னாவுக்கு நெருங்கிய ஒருவர் கூறினார். ஆனால் ஆந்திரா மதுபான ஊழல் வழக்கில் தமன்னாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய தகவல் சமீபத்தில் வெளியானது. அது பற்றி மீடியாவினர் கேள்வி கேட்பார்கள் என்பதாலேயே அவர் ரகசியமாக வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்தியாவின் Big Momma Productions மற்றும் இலங்கையில் வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் பிற தயாரிப்புகளுக்கு சேவைகளை வழங்கும் ASIAN FILM CREW Productions இணைந்து தயாரிக்கும் விளம்பரப் படப்பிடிப்பிற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என அவரது தரப்பில் கூறப்பட்டது. படப்பிடிப்பு அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. மேலும் அவர் சில நாட்கள் இலங்கையில் தங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.