3 நாட்களுக்கு விமர்சனம் வேண்டாம்: விஷால் கருத்துக்கு சரவணன் பதில்
சென்னை: தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமையாளர்களை கவுரவிக்கும் விதமாக, டிஎன்ஐடி-2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா, வரும் ஆகஸ்ட் 23ம் தேதி பெங்களூரு பேலஸ் கிரவுண்டில் நடக்கிறது. இவ்விழாவில் தென்னிந்திய செய்தி ஊடகங்களில் பணியாற்றும் திறமையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஏ.ஆர் குரூப் வழங்க, டிஎன்ஐடி குழுமத்தின் சிஇஓ ரகுபட் விழாவை நடத்துகிறார்.
இதுகுறித்து சென்னையில் நடந்த அறிமுக நிகழ்ச்சியில் நடிகர்கள் சரவணன், நாகேந்திர பிரசாத் பங்கேற்றனர். பிறகு நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சரவணன், ‘நல்ல தரமான கதையம்சம் கொண்ட படங்களை எந்த விமர்சனத்தாலும் சாய்க்க முடியாது. படம் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனம் செய்யக்கூடாது என்று விஷால் சொல்லியிருப்பது அவரது கருத்து. ஆனால், சிறுபட்ஜெட் படங்களுக்கு கண்டிப்பாக விமர்சனங்கள் தேவை. அதுவும் ரிலீசான அன்றிலிருந்தே தேவைப்படுகிறது. அப்போதுதான் படம் ரிலீசான விஷயம் மக்களுக்கு தெரியும்’ என்றார்.