முன்னணி ஹீரோக்களை விளாசும் தீபிகா படுகோன்; அவங்களுக்கு மட்டும் 8 மணி நேர வேலையா?
மும்பை: ‘சினிமா படப்பிடிப்பில் 8 மணி நேரம் மட்டுமே பணியாற்ற முடியும்’ என்று சொன்னது பலத்த சர்ச்சையானதை தொடர்ந்து, தீபிகா படுகோன் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். ‘கல்கி 2989 ஏடி’ என்ற பான் இந்தியா படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதற்கான காரணங்கள் என்று பல விஷயங்கள் சொல்லப்பட்டது. முன்னதாக, ‘ஸ்பிரிட்’ என்ற இந்தி படத்திலும் தீபிகா படுகோன் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கான காரணங்கள் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘படப்பிடிப்பில் தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணியாற்ற முடியும்’ என்று தீபிகா படுகோன் சொன்னதே இதற்கு காரணம் என்று பலர் குறிப்பிட்டனர். இதுகுறித்து முதல்முறையாக தீபிகா படுகோன் பேட்டி ஒன்றில் ஆவேசமாக பதிலளித்துள்ளார். அது வருமாறு: இந்திய திரையுலகில் பல முன்னணி ஹீரோக்கள், பல வருடங்களாக தினமும் 8 மணி நேரம் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கின்றனர்.
அதெல்லாம் தலைப்பு செய்தியாகவில்லை. ஆனால், நான் சொன்னால் மட்டும் பெரிய செய்தியாகி விடுகிறது. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. சில நடிகர்கள் வார நாட்களில் மட்டுமே நடிப்பார்கள். வார இறுதி நாட்களில் படப்பிடிப்புக்கு வர மாட்டார்கள். இந்திய திரையுலகில் இருக்கும் ஒரு முக்கியமான பிரச்னை என்னவென்றால், இது ஒழுங்கற்ற திரையுலகமாகும். இதை கட்டமைக்க வேண்டும். சமீபத்தில் குழந்தை பெற்ற சில நடிகைகள் கூட 8 மணி நேரம்தான் பணியாற்றுகின்றனர். அதுகூட தலைப்பு செய்தியாகவில்லை. என் வாழ்க்கை முழுக்க இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டு வருகிறேன். எப்போதுமே அமைதியாக என் சம்பந்தப்பட்ட போராட்டங்களை நடத்தி இருக்கிறேன். சில நேரங்களில் அந்த போராட்டங்கள் பகிரங்கமாகி விடும், நான் வளர்க்கப்பட்ட விதம் அப்படி இல்லை. ஆனால், அவற்றை மிக அமைதியாகவும், மிக கண்ணியமாகவும் எதிர்கொள்வதில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன்.