இந்தியாவின் முதல் மனநல தூதராக தீபிகா படுகோன் நியமனம்
புதுடெல்லி: உலக மனநல தினத்தையொட்டி, நாட்டின் மனநல ஆதரவு அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனை, இந்தியாவின் முதல் மனநல தூதராக ஒன்றிய சுகாதார அமைச்சகம் நியமித்துள்ளது. மனநலம் சார்ந்த உரையாடல்களை முன்னெடுத்து செல்வதில் தீபிகா படுகோன் ஆற்றிய தீவிர பங்களிப்பின் காரணமாகவே அவர் இந்த பொறுப்புக்கு தேர்வு
செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீபிகா படுகோன் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘உலக மனநல தினத்தன்று ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் முதல் மனநல தூதராக நியமிக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பொது சுகாதாரத்தின் முக்கிய பகுதியாக மன ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், மனநலம் நிறைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.