ஈழத் தமிழர் பற்றிய காட்சி: வருத்தம் தெரிவித்த கிங்டம் தயாரிப்பாளர்
சென்னை: ‘ஜெர்சி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கெளதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கிற தெலுங்குத் திரைப்படம் ‘கிங்டம்’. விஜய் தேவரகொண்டா, பாக்ய போஸ் உட்படப் பலரும் நடித்திருக்கும் இத்திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களைத் தவறாகச் சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகப் படத்திற்கு அரசியல் கட்சியினர் தொடங்கி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது, ‘கிங்டம்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், படத்திற்கு வரும் எதிர்ப்புகளுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், ‘‘எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘கிங்டம்’. இப்படத்தின் சில காட்சியமைப்புகள் தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாகக் கேள்விப்பட்டோம். தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது எனப் படத்தின் மறுப்புப் பகுதியில் (disclaimer portion) குறிப்பிட்டுள்ளோம் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம். இதையும் மீறி, மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.