பேரன் படத்துக்கு ‘கிளாப்’ அடித்த தாத்தா
சினிமா மீடியா அன்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் ராஜ், கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் ஜி.தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான தனது பேரன் பவிஷ் ஹீரோவாக நடிக்கும் 2வது படம் என்பதால், கஸ்தூரிராஜா கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். தனுஷ், செல்வராகவன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜே.லக்ஷ்மன் இயக்கிய ‘போகன்’, ‘பூமி’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய மகேஷ் ராஜேந்திரன், புதிய படத்தை எழுதி இயக்குகிறார். தெலுங்கு நடிகையும், யூடியூப் சென்சேஷன் என்று புகழ் பெற்றவருமான நாகா துர்கா, தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, மகேந்திரன் அரங்கம் அமைக்கிறார். என்.பி.காந்த் எடிட்டிங் செய்ய, அபிஷேக் சண்டை பயிற்சி அளிக்கிறார். ஜென் ஸீ ரசிகர்களும், குடும்பங்களும் ரசிக்கும் வகையில் கதை எழுதப்பட்டுள்ளது.
